ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனத்தின் இந்திய பிரிவு ஐபிஓ தாக்கல் செய்துள்ளது. இந்த ஐபிஓ வெற்றியடையும் பட்சத்தில் எல்ஐசி ஐபிஓ வுக்கு அடுத்தபடியாக இந்திய அளவில் மிகப்பெரிய ஐபிஓவாக வரலாற்றில் இடம் பிடிக்கும்.
ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனத்தின் இந்திய பிரிவு 25000 கோடி ரூபாய் மதிப்பில் ஐபிஓ வெளியிட உள்ளது. இதற்கான ஆவணங்களை பங்குச் சந்தை கண்காணிப்பு நிறுவனமான செபி இடம் சமர்ப்பித்துள்ளது. மேலும், கடந்த 20 ஆண்டுகளில் முதல் முறையாக ஐபிஓ சமர்ப்பிக்கும் வாகன நிறுவனமாக வரலாறு படைத்துள்ளது. இதற்கு முன், கடந்த 2003 ஆம் ஆண்டு மாருதி சுசுகி நிறுவனத்தின் ஐபிஓ வெளியானது குறிப்பிடத்தக்கது. ஹூண்டாய் நிறுவனத்தின் ஐபிஓவில் புதிய பங்குகள் வெளியிடப்படவில்லை. மாறாக, சில்லறை மற்றும் தகுதி வாய்ந்த முதலீட்டாளர்களுக்கு சலுகை விலையில் பங்குகளை விற்க திட்டமிடப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 14.2 கோடி பொது பங்குகளை ஹூண்டாய் விற்க உள்ளதாக கூறப்படுகிறது.














