இந்தியாவிலேயே முதல்முறையாக, யுபிஐ கட்டணங்களை மாதந்தோறும் செலுத்தும் தவணை முறையை ஐசிஐசிஐ வங்கி அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டம் வாடிக்கையாளர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் எனவும், அதிக விலையுள்ள பொருட்களை டிஜிட்டல் பரிவர்த்தனை மூலம் வாங்குவதற்கு துணை புரியும் எனவும், தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டம் 10000 ரூபாய்க்கு கூடுதலான டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு செயல்படுத்தப்படும் என்று வங்கி தெரிவித்துள்ளது. மேலும், 3, 6 அல்லது 9 மாத தவணைகளில் வாடிக்கையாளர்கள் முழுத்தொகையை செலுத்த முடியும் என கூறியுள்ளது. தற்போதைய நிலையில், மின்னணு சாதனங்கள், மளிகை பொருட்கள், அழகு சாதனப் பொருட்கள் ஆகியவற்றை வாங்குவது, சுற்றுலா மற்றும் ஹோட்டல் புக்கிங்களை மேற்கொள்வது, ஆகியவற்றுக்கு இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. விற்பனையாளரின் க்யூ ஆர் கோடை ஸ்கேன் செய்த பின்னர், அதில் இ எம் ஐ ஆப்ஷனை தேர்ந்தெடுத்து, தவணை முறை பரிவர்த்தனையில் ஈடுபடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில், இது இணைய வர்த்தக செயலிகளிலும் விரிவாக்கம் செய்யப்படும் என்று ஐசிஐசிஐ தெரிவித்துள்ளது.