கிட்டத்தட்ட 5 மில்லி மீட்டர் அளவுக்கு குறைவான பிளாஸ்டிக், மைக்ரோ பிளாஸ்டிக் என்று அழைக்கப்படுகிறது. இந்த வகை பிளாஸ்டிக் துகள்கள் நம் சுவாசிக்கும் காற்றில் கூட கலந்துள்ளதாக கூறப்படுகிறது. உண்ணும் உணவு, அருந்தும் நீர் வழியாக மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் நம் உடலுக்குள் சென்று அதிக பாதிப்புகளை விளைவிக்கின்றன. இதற்கான தீர்வு தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்திய அறிவியல் ஆய்வு நிறுவனத்தை (IISC) சேர்ந்த விஞ்ஞானிகள் மைக்ரோ பிளாஸ்டிக்கை நீரில் இருந்து அகற்றும் ஹைட்ரோஜெல் ஒன்றை உருவாக்கி உள்ளனர். இதற்கு முன்பு, நீரில் இருந்து மைக்ரோ பிளாஸ்டிக் துகளை அகற்றுவதற்கு பல்வேறு வடிகட்டல் முறைகள் சோதிக்கப்பட்டன. ஆனாலும் அவை சிறந்த தீர்வாக அமையவில்லை. இறுதியாக, 3டி ஹைட்ரோஜெல் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஹைட்ரோஜெல் மூலம் மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் பிரித்தெடுக்கப்பட்டு, புற ஊதா கதிர்கள் மூலம் மக்கச் செய்யப்படுகிறது. சுற்றுச்சூழல் பாதிப்பை தவிர்க்கும் இந்த கண்டுபிடிப்பு அதிக பாராட்டை பெற்று வருகிறது.