இலக்கியத்தில் பேரிடர்கள்

இலக்கியங்கள், பழங்கால நிகழ்வுகளைப் பற்றியக் காலக் கண்ணாடிகளாகத் திகழ்கின்றன. அவற்றில் அறம், பொருள், இன்பம், வீரத்துடன், பேரிடர்களைப் பற்றியக் குறிப்புகளும் காணக் கிடைக்கின்றன. சங்க இலக்கியங்களானப் புறநானூறு, கலித்தொகை மற்றும் இரட்டைக் காப்பியங்களான சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகியவற்றில் கடல்கோள் என்னும் பேரிடரைப் பற்றியக் குறிப்புகள் நேரடியாகவும், மறைமுகமாகவும் கிடைகின்றன. மேலும் நற்றிணை, குறுந்தொகை மற்றும் பதிற்றுப்பத்து ஆகிய நூல்களில் பூகம்பத்தைப் பற்றியக் குறிப்புகள் கிடைக்கின்றன. புறநானூற்றில் மலையமான் திருமுடிக்காரியைக் கபிலர் பாடியப் பாடலே தமிழ் இலக்கியத்தில் கடல்கோள் […]

இலக்கியங்கள், பழங்கால நிகழ்வுகளைப் பற்றியக் காலக் கண்ணாடிகளாகத் திகழ்கின்றன. அவற்றில் அறம், பொருள், இன்பம், வீரத்துடன், பேரிடர்களைப் பற்றியக் குறிப்புகளும் காணக் கிடைக்கின்றன. சங்க இலக்கியங்களானப் புறநானூறு, கலித்தொகை மற்றும் இரட்டைக் காப்பியங்களான சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகியவற்றில் கடல்கோள் என்னும் பேரிடரைப் பற்றியக் குறிப்புகள் நேரடியாகவும், மறைமுகமாகவும் கிடைகின்றன. மேலும் நற்றிணை, குறுந்தொகை மற்றும் பதிற்றுப்பத்து ஆகிய நூல்களில் பூகம்பத்தைப் பற்றியக் குறிப்புகள் கிடைக்கின்றன.

புறநானூற்றில் மலையமான் திருமுடிக்காரியைக் கபிலர் பாடியப் பாடலே தமிழ் இலக்கியத்தில் கடல்கோள் பற்றிய முதல் பதிவாக உள்ளது. "கடல்கொளப் படா அது... காரி நின் நாடே" என்ற பாடலின் கருத்து என்னவெனில் கடற்கரையிலிருந்து வெகு தூரத்தில் உள்ள காரியின் நாடு (திருக்கோவிலூர்) கடலால் அழிய வாய்ப்புகள் இல்லை என்பதாகும். இதன் மூலம் அறியப்படும் மறைமுகக் கருத்து என்னவென்றால் கடற்கரையின் அருகில் உள்ள இடங்கள் கடலால் சேதங்கள் அடைந்தன என்பதே ஆகும். இதுவே கடலால் தமிழகம் அடைந்தப் பாதிப்புகள் குறித்த முதல் பதிவாகும்.

மணிமேகலைக் காப்பியத்தில் கடல்கோள் பற்றியக் குறிப்புகள் பல்வேறு காதைகளில் பரவிக் கிடக்கின்றன. சீத்தலைச் சாத்தனார் பலக் கதாப்பாத்திரங்கள் வழியாகக் காவேரிப் பூம்பட்டிணம் கடலால் அழிந்தச் செய்தியை நமக்குத் தெரிவிக்கிறார். இரட்டைக் காப்பியம் எழுந்தக் காலத்தில் சிறந்தத் துறைமுகப் பட்டிணமாகவும், மிகச் சிறந்த வணிகப் பெருநகரமாகவும் அறியப்பட்டக் காவிரிப் பூம்பட்டிணத்தின் சிறப்புகள் பற்றியக் குறிப்புகள், பிற்கால இலக்கியங்களில் அவ்வளவாக இல்லை. ஆதலால் மணிமேகலைக் காப்பியக் காலத்தில் காவிரிப் பூம்பட்டிணம் கடலுக்கு இரையாகியிருக்கக் கூடும் என்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். அந்தப் பட்டிணம் துறைமுக நகரமாக இருந்தது என்பதற்குத் தற்போது கிடைக்கும் தொல்லியல் ஆய்வுத் தடயங்கள் சான்று பகர்கின்றன. எனவே, சீத்தலைச் சாத்தனார் வாழ்ந்தக் காலத்திலோ அல்லது அதற்குச் சற்று முன்போ, அந்நகரைக் கடல் கொண்டிருக்கலாம் என்றும் மணிமேகலையின் கதையைக் கூற வந்த அவர், அந்தக் கடல்கோள் நிகழ்வினைக் கதையோடு இணைத்துக் காப்பியத்தைப் பாடி இருக்கிறார் என்றும் கூறுகின்றனர். கதை நிகழ்ந்த காலக்கட்டத்தில் நிலவி வந்த நம்பிக்கைகளுக்கேற்ப, கடவுள் இட்ட சாபத்தின் காரணமாகக் கடல்கோள் நிகழ்ந்தது என்று காப்பியத்தின் பல இடங்களில் சொல்லப் பட்டிருக்கிறது.

“வானவன் விழாக்கோண் மாநகரொழிந்தது
மணிமேகலா தெய்வ மற்றது பொறாஅள்
அணிநகர்தன்னை யலைகடல் கொள்கென
விட்டனள் சாபம் பட்டதிதுவால்”

என்றப் பாடல் அதற்குச் சான்றாகும். “ஆங்குவிட்டு இறவாதுஇப்பதி புகுந்தது கேட்டு” எனும் மற்றொரு தொடரின் மூலம் ‘கடல்கோளில் பலர் இறந்திருக்கலாம்’ எனும் செய்தியும் நமக்குப் புலனாகிறது.

சங்கத் தமிழ் நூலான கலித்தொகையும், சங்ககாலத்துக்குப்பின் எழுந்த சிலப்பதிகாரமும், பாண்டிய நாட்டின் தென்பகுதியைக் கடல் விழுங்கியதைக் கூறுகின்றன:

“மலிதிரை யூர்ந்துதன் மண்கடல் வௌவலின்
மெலிவின்றி மேற்சென்று மேவார்நா டிடம்படப்
புலியொடு வில் நீக்கிப், புகழ் பொறித்த கிளர்கெண்டை,
வலியினால் வணக்கிய, வாடாச்சீர்த் தென்னவன்”

என்றக் கலித்தொகைப் பாடல், “முற்காலத்தில் கடல் பொங்கிப் பாண்டியனின் நாட்டை விழுங்கியது. ஆனாலும் பாண்டியன் தளர்ந்து விடவில்லை. அருகில் உள்ள சேர சோழ நாடுகளை வென்று புலிக்கொடி வில்கொடியை நீக்கி அவைகளைப் பாண்டிய நாட்டுடன் சேர்த்துக் கொண்டான்” என்றுப் பொருள் படுகிறது.

“பஃறுளி யாற்றுடன் பன் மலை அடுக்கத்துக்
குமரிக் கோடும் கொடுங்கடல் கொள்ள
வடதிசைக் கங்கையும் இமயமும் கொண்டு,
தென்திசை ஆண்ட தென்னவன் வாழி”

என்றச் சிலப்பதிகாரப் பாடல், “கடல் சினந்து எழுந்து பஃறுளி என்னும் ஆற்றையும் பல மலைகளையும் குமரிக் கோட்டையும் மூழ்கடித்தது. அதற்குப் பின்னர் பாண்டிய மன்னன் வடதிசைக்குச் சென்று கங்கை ஆற்றையும் இமயமலையையும் வெற்றிக் கொண்டான்” என்றுக் கூறுகிறது. சிலப்பதிகாரத்திற்கு உரை எழுதிய அடியார்க்கு நல்லார், 700 காதம் பரப்புடைய 49 நாடுகளைக் கடல் விழுங்கியதாகக் கூறி, அந்த 49 நாடுகளின் (வட்டாரங்களின்) பெயர்களையும் நமக்கு அளிக்கிறார். தமிழகத்தில் நிகழ்ந்த கடற்கோளை உறுதி செய்யும் விதத்தில், கிரேக்க அறிஞர் பிளினியும் கொற்கையிலிருந்தப் பாண்டியத் தலைநகர் மதுரைக்கு மாற்றப்பட்டதைக் குறிப்பிடுகிறார். மேலும், இறையனார் களவியலுரை தென்மதுரையையும் கபாடபுரத்தையும் கடல் விழுங்கியதால் மூன்றாவது தமிழ்ச்சங்கம் மதுரையில் நிறுவப்பட்டது என்றுக் கூறுகிறது. எனவே, இந்தக் கடல்கோள்கள் கி.மு. முதலிரண்டு நூற்றாண்டுகளில் ஏற்பட்டிருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள்.

மேலும், பலச் சங்கப் பாடல்கள் பூகம்பங்கள் குறித்தும், கடல் எல்லை மீறுவதுப் பற்றியும் பொதுவாகப் பாடுகின்றன.

“நிலம்புடை பெயரினும் நீர் திரிந்து பிறழினும்இலங்குதிரைப் பெருங்கடற்கு எல்லை தோன்றினும்”

என்றக் குறுந்தொகைப் பாடல் வரியும் “பெருநிலங்கிளறினும்” என்ற நற்றிணைத் தொடரும் “நிலத்திறம் பெயருங்காலை யாயினும்” என்றப் பதிற்றுப்பத்து சொற்றொடரும் “நிலம்புடை பெயர்வதாயினும்” என்றப் புறநானூற்றுப் பாடல் அடிகளும் பூகம்பம் பற்றியும் கடல் மற்றும் நிலம் ஆகியன அழிந்துபட்டு, எல்லை மாறுவது பற்றியும் பேசுகின்றன.

கடலே நிலப்பகுதியை உருவாக்கி, நிலப்பரப்பைக் காத்து நின்று, பின்னர் அழிக்கவும் வல்லது என்று, கடலைப் பற்றியத் தெளிவானக் குறிப்புகள் இலக்கியத்தில் கூறப்படுகின்றன. இவ்வாறு இலக்கியங்களில் கூறப்படும் கடல்கோள்கள் உண்மையாகவே நிகழ்ந்தனவா என்றும், அறிவியல் ரீதியாக அவ்வாறானப் பேரிடர்கள் எக்காலத்தில் நிகழ்ந்திருக்கக் கூடும் என்றும், பல ஆய்வுகள் நடந்து வருகின்றன. வரலாற்றைப் பற்றிய இந்த ஆய்வுகளுக்கெல்லாம் இலக்கியங்களில் காணப்படும் குறிப்புகளே பெரிதும் உதவுகின்றன. குமரிக்கண்டம் பற்றிய ஆய்வுகளும் இந்தக் குறிப்புகளின் அடிப்படையிலேயே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனவே இலக்கியங்கள் வெறும் பாடல்கள் அல்ல; அவை வரலாற்றுப் பெட்டகங்கள் ஆகும்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu