அரிசி ஏற்றுமதி தடையை நீக்க இந்தியாவுக்கு சர்வதேச நாணய நிதியம் கோரிக்கை விடுத்துள்ளது.
இந்தியா முழுவதும் சில மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் விவசாய உற்பத்தி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இது அரிசி விலையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற அச்சம் காரணமாக மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு, மற்றும் பொது வினியோகத்திற்கான அமைச்சகம், ஜூலை 20 அன்று 'பாஸ்மதி அல்லாத அரிசி' ஏற்றுமதிக்கு தடை விதித்தது.
இந்த தடை குறித்து செய்தி வெளியான பின் அமெரிக்கா உட்பட பல மேற்கத்திய நாடுகளில் அரிசி விலை பன்மடங்காக உயர்த்தப்பட்டது. இந்நிலையில் இந்த தடை குறித்து சர்வதேச நாணய நிதியத்தின் தலைமை பொருளாதார நிபுணர் பியர்-ஒலிவியர் கோரின்சாஸ் கூறியிருப்பதாவது:- இந்தியாவின் அரிசி ஏற்றுமதி தடையால் உலகம் முழுவதும் உணவு பண்டங்களின் விலை உயரும். சில நாடுகள் எதிர்வினை நடவடிக்கைகளையும் எடுக்கலாம். எனவே இந்த தடையை நீக்க கோருகிறோம். 2022-ம் ஆண்டோடு ஒப்பிடுகையில் இந்திய பொருளாதாரம் சற்று இறங்கி இருந்தாலும், ஒரு வலிமையான வளர்ச்சி தென்படுகிறது. எனவே இந்த தடை தேவையற்றது. இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.