செவ்வாய் கிரக ஆய்வுக்காக அனுப்பப்பட்ட நாசாவின் கியூரியாசிட்டி ரோவர், தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளது. அதில், "இந்த புகைப்படத்தை முதல் முறையாக அனுப்புகிறேன். கடந்த மாதம் சூரியன் மறைவின் போது இந்த புகைப்படத்தை எடுத்தேன். எனது குழு இதனை அற்புதமான புகைப்படம் என்று பாராட்டுகின்றனர். செவ்வாய் கிரகத்தில் எடுக்கப்பட்ட தெளிவான சூரிய கதிர் புகைப்படம் இதுவே என்று கூறுகின்றனர்” என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் புகைப்படம் தற்போது இணையத்தை ஆக்கிரமித்துள்ளது.
கியூரியாசிட்டி ரோவர் எடுத்த இந்த புகைப்படத்தில், சாம்பல் நிற செவ்வாய் கிரக வானில், வெள்ளை, பச்சை, இளஞ்சிவப்பு ஆகிய நிறங்களின் கலவையில் சூரிய கதிர்கள் தென்படுகின்றன. சூரியன் மறைவின் போது எடுக்கப்பட்ட இந்த புகைப்படம், 28 தனித்தனி புகைப்படங்களின் தொகுப்பு என்று நாசா தெரிவித்துள்ளது.