ஈரோட்டில் பறக்கும் படையினருடன் இணைந்து துணை ராணுவத்தினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதை தடுக்கும் வகையில் 3 பறக்கும் படையினர், 4 நிலை கண்காணிப்பு குழுவினர் தீவிர வாகனச்சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், தமிழ்நாடு சிறப்பு காவல் படையைச் சேர்ந்த 160 வீரர்கள் பாதுகாப்பு பணிக்காக ஈரோடு வந்துள்ளனர். பதற்றமான வாக்குச்சாவடிகள் என கண்டறியப்பட்ட 32 வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட துணை ராணுவப்படையினரும் ஈரோடு வந்துள்ளனர்.
இந்நிலையில், பறக்கும்படையினர் மற்றும் நிலைக்குழுவினருடன் இணைந்து, துணை ராணுவப் படையினரும் வாகனத் தணிக்கை பணியில் நேற்று முதல் ஈடுபடத் தொடங்கியுள்ளனர். ஒரு குழுவில் 8 துணை ராணுவத்தினர், நிலை கண்காணிப்பு குழுவினர் 4 பேர், காவல்துறையினர் 3 பேர் மற்றும் ஒளிப்பதிவாளர், ஓட்டுநர் என 17 பேர் இடம் பெற்றுள்ளனர்.