கேரளாவில் செப்டம்பர் மாதம் முதல் அரசு பேருந்துகள், கனரக வாகனங்களில் சீட் பெல்ட் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கேரள போக்குவரத்து துறை மந்திரி ஆன்றனி ராஜூ கூறுகையில், மத்திய அரசின் போக்குவரத்து சட்ட விதிகளின் படி வாகனங்களில் சீட் பெல்ட் அணிவது கட்டாயமாகும். அதன்படி கேரளாவில் இலகுரக வாகனங்களில் ஓட்டுனர்கள் சீட் பெல்ட் அணிவது கட்டாயமாக்கப்பட்டு முறையாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. ஆனால், பேருந்துகள் உள்பட கனரக வாகனங்களில் சீட் பெல்ட் அணிய இதுவரை சலுகை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் வருகிற செப்டம்பர் மாதம் முதல் கேரள அரசு பேருந்து உள்பட கனரக வாகனங்களில் சீட் பெல்ட் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எனவே, சரக்கு லாரிகள் உள்பட அனைத்து வாகனங்களிலும் டிரைவர் மற்றும் முன் இருக்கையில் அமரும் பயணியோ, கண்டக்டரோ, கிளீனரோ கண்டிப்பாக சீட் பெல்ட் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வாகனங்களில் சீட் பெல்ட் சீரமைப்பதற்காக செப்டம்பர் வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.