தமிழ்நாட்டில் 53 சதவீதம் வளர் இளம்பெண்களுக்கு ரத்தசோகை பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
இதுகுறித்து அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறுகையில், சைதாப்பேட்டையில் 500 பள்ளி மாணவ-மாணவிகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த மருத்துவ முகாமில் 10 முதல் 19 வயதுக்கு உட்பட்ட வளர் இளம் பருவத்தினருக்கு சுகாதார ஆலோசனைகள், விழிப்புணர்வு மற்றும் ரத்த சோகைக்கான பரிசோதனைகள் உள்ளிட்ட அனைத்து சிறப்பு பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படும்.
தமிழ்நாட்டில் ரத்தசோகை பாதிப்பை பொறுத்தவரை வளர் இளம் பெண்களுக்கு 52.9 சதவீதம், ஆண்களுக்கு 24.6 சதவீதம் கண்டறியப்பட்டுள்ளது. ஆகையால் ரத்தசோகை பாதிக்கப்பட்ட வளர் இளம் பருவத்தினர்களை கண்டறிந்து 20 வகையான சிறப்பு மருத்துவ சிகிச்சை வழங்குவதுடன் ரத்தசோகை இல்லா தமிழ்நாடாக மாற்றுவதே சிறப்பு முகாமின் நோக்கமாகும் என்று தெரிவித்துள்ளார்.