கனமழை காரணமாக வட மாநிலங்களுக்குச் செல்லும் லாரிகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. ஆயிரம் கோடிக்கும் மேலான சரக்குகள் தேங்கியுள்ளன.
தமிழகத்திலிருந்து வடமாநிலங்களுக்கு 1.50 இலட்சத்திற்கும் மேற்பட்ட லாரிகள் இயக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்திலிருந்து வட மாநிலங்களுக்கு ஜவுளி, முட்டை, இரும்பு மற்றும் பிற பொருள்களும், வட மாநிலத்திலிருந்து தமிழகத்திற்கு வெங்காயம், பூண்டு, பருப்பு, ஆப்பிள் போன்ற பல்வேறு பொருள்களும் கொண்டு செல்லப்படுகின்றது. இந்த நிலையில் டெல்லி, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், குஜராத், உத்தரப்பிரதேசம், கர்நாடகா, இமாச்சல் பிரதேசம் உட்பட்ட மாநிலங்களில் கன மழை பெய்து வருகிறது.
இதனால் வட மாநிலத்திற்கு செல்லும் 75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லாரிகள் தமிழகத்தில் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மேலும் கடந்த பத்து நாட்களில் ஆயிரம் கோடிக்கும் மேலான பொருள்கள் தேங்கியுள்ளன.
இதனால் லாரி உரிமையாளர்கள், டிரைவர்கள் கிளீனர்கள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். மேலும் காய்கறி மற்றும் மளிகை பொருட்கள் விலை உயர வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.