திருவண்ணாமலையில் காத்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு மாடவீதியில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலையில் வரும் 27ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ள கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு, முன்னேற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. அதையொட்டி, சுவாமி திருவீதியுலா நடைபெறும் திருக்கோயில் மாட வீதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுகிறது. இந்நிலையில், மாட வீதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ், எஸ்பி கார்த்திகேயன் ஆகியோர் நேரில் பார்வையிட்டனர்.
மேலும், தேரோடும் மாட வீதியில் தேரோட்டத்துக்கு எவ்வித இடையூறும் இல்லாதபடி சாலைகளை பழுது நீக்கி சீரமைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டார். முழுமையாக சீரமைப்பு பணியை முடித்து, தேரோட்டத்துக்கு முன்பாக அதன் உறுதித்தன்மை குறித்து பொதுப்பணித்துறையிடம் சான்று பெற வேண்டும் என உத்தரவிட்டார்.