கரும்பு விவசாயிகளின் வங்கிக் கணக்கில் விரைவில் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், வேளாண் பட்ஜெட்டில் அறிவித்தபடி 2021-22 அரவைப் பருவத்துக்கு மத்திய அரசு அறிவித்துள்ள நியாயமான மற்றும் ஆதாய விலை டன் ஒன்றுக்கு ரூ.2,755 ஆகும். இந்த விலையை விட கூடுதலாக மாநில அரசின் சிறப்பு ஊக்கத்தொகையாக டன்னுக்கு ரூ.195 வழங்கும் வகையில் ரூ.199 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.
சிறப்பு ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை டிச.7-ம் தேதி முதல்வர் தொடங்கி வைத்தார். இதையடுத்து, 2021-22 அரவைப் பருவத்தில் சர்க்கரை ஆலைகளில் பதிவு செய்து கரும்பு வழங்கிய தகுதி வாய்ந்த விவசாயிகளின் விவரத்தை சேகரித்து, சிறப்பு ஊக்கத் தொகையை விரைவில் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்க சர்க்கரை துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனால், கரும்பு வழங்கிய தகுதி வாய்ந்த விவசாயிகளுக்கு டன் ஒன்றுக்கு ரூ.2,950 வழங்கப்பட உள்ளது. இதன்மூலம், 1.21 லட்சம் கரும்பு விவசாயிகள் பயனடைவர் என்று அவர் தெரிவித்துள்ளார்.