காரில் சிலிண்டர் வெடித்து தீப்பிடித்த சம்பவம்: கோவையில் காவல் துறையினர் கண்காணிப்பு தீவிரம்

October 25, 2022

காரில் சிலிண்டர் வெடித்து தீப்பிடித்த சம்பவத்தைத் தொடர்ந்து, கோவையில் காவல்துறையினரின் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த ஞாயிறு அதிகாலை கோவை கோட்டைமேடு சங்கமேஸ்வரர் கோயில் அருகே ஞாயிறு அதிகாலை மாருதி காரில் இருந்த சமையல் எரிவாயு சிலிண்டர் திடீரென வெடித்து தீப்பிடித்தது. காரை ஓட்டி வந்த நபர் உயிரிழந்தார். இச்சம்பவத்தைத் தொடர்ந்து, விபத்து நடந்த பகுதியை காவல்துறையினர் தங்களது பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வந்தனர். நான்கு புறமும் தலா 100 மீட்டர் தூரத்துக்கு மக்கள் நுழைய தடை விதித்து […]

காரில் சிலிண்டர் வெடித்து தீப்பிடித்த சம்பவத்தைத் தொடர்ந்து, கோவையில் காவல்துறையினரின் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த ஞாயிறு அதிகாலை கோவை கோட்டைமேடு சங்கமேஸ்வரர் கோயில் அருகே ஞாயிறு அதிகாலை மாருதி காரில் இருந்த சமையல் எரிவாயு சிலிண்டர் திடீரென வெடித்து தீப்பிடித்தது. காரை ஓட்டி வந்த நபர் உயிரிழந்தார். இச்சம்பவத்தைத் தொடர்ந்து, விபத்து நடந்த பகுதியை காவல்துறையினர் தங்களது பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வந்தனர்.

நான்கு புறமும் தலா 100 மீட்டர் தூரத்துக்கு மக்கள் நுழைய தடை விதித்து இரும்பு தடுப்புகளை அமைத்தனர். குறிப்பாக, டவுன்ஹாலில் இருந்து கோட்டை சங்கமேஸ்வரர் கோயிலுக்குச் செல்லும் ஈஸ்வரன் கோயில் வீதி பாதையை அடைத்தனர். அவ்வழியாக செல்லும் மக்களிடம் பெயர், விவரங்களை போலீஸார் சேகரித்த பின்னரே உள்ளே அனுமதித்தனர்.

அந்தச் சாலையில் உள்ள ஜவுளிக்கடைகள், புத்தகக்கடைகளை திறக்க போலீஸார் தடை விதித்தனர். இதனால் தீபாவளிப் பண்டிகை வியாபாரத்தை நடத்த முடியாமல், ஜவுளிக்கடைகளின் உரிமையாளர்கள் வருத்தத்துடன் டவுன்ஹால் பகுதியில் நின்றிருந்தனர். சம்பவம் நடந்த பகுதியில் முகாமிட்டு டிஜிபி சைலேந்திரபாபு, சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி தாமரைக் கண்ணன், உளவுத்துறை ஐஜி செந்தில் வேலவன், மேற்கு மண்டல ஐஜி சுதாகர், மாநகரகாவல் ஆணையர் வே.பாலகிருஷ்ணன் உள்ளிட்ட உயரதிகாரிகள் விசாரணையை துரிதப்படுத்தினர்.

கார் வெடித்து சிதறியபோது, அதன் உதிரி பாகங்கள் நாலா புறம் சிதறின. அதன்படி, உதிரிபாகங்களின் ஒரு பகுதி சங்க மேஸ்வரர் கோயில் சுவரின் மீது மோதி கீழே விழுந்துள்ளது. இதில் கோயின் முன்பகுதியில் இருந்த பெயர் பலகை உள்ளிட்டவை சேதமடைந்தன.

பருவமழையின் காரணமாக மாநகரில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதனால் விபத்து நடந்த பகுதியில் மழை பெய்து, தடயங்கள் எதுவும் அழிந்து விடக்கூடாது என்பதற்காகவும், விசாரணை எவ்வித இடையூறுமின்றி நடக்கவும் ஏதுவாக அங்கு சாமியானா பந்தல் அமைத்தனர். விபத்து நடந்த பகுதியை முழுமையாக மறைக்கும் அளவுக்கு சாமியானா பந்தல் அமைக்கப்பட்டிருந்தது.

மேலும், மத ரீதியிலான பதற்றம் ஏற்படுவதைத் தடுக்கவும், தேவையற்ற சச்சரவுகள் ஏற்படுவதைத் தடுக்கவும் அப்பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டனர்.

திருப்பூர் காவல் கண்காணிப்பாளர் சஷாங் சாய் பாதுகாப்புப் பணிகளை ஆய்வு செய்தார். தொடர்ந்து மறு உத்தரவு வரும்வரை 24 மணி நேரமும் சுழற்சி முறையில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட வேண்டும் என போலீஸாருக்கு அறிவுறுத்தினார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu