சென்னையில் மின்வாரியத்திற்கு கருவிகள் வாங்கியதில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. அதன் அடிப்படையில் 40 இடங்களில் வருமானவரித்துறை சோதனை நடத்தி வருகின்றனர்.
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் கீழ் எண்ணூர், வடசென்னை, தூத்துக்குடி, மேட்டூர், உள்ளிட்ட இடங்களில் செயல்பட்டு வரும் அனல் மின் நிலங்களில் நிலக்கரியை பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் நிலக்கரியை எடுத்துச் செல்ல கன்வேயர் பெல்ட்
பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அதே போல் பல உபகரணங்கள் இதில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.இந்தப் பொருள்களை நான்கு நிறுவனங்கள் உற்பத்தி செய்து வழங்கி வருகின்றன. இந்த நிறுவனங்கள் சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகின்றன. தற்போது இதில் முறைகேடுகள் ஏற்பட்டு இருப்பதாக புகார்கள் எழுந்ததுள்ளதை அடுத்து வருமானவரித்துறை சென்னையில் 4 நிறுவனங்களும் போலியான ரசீதுகளை உருவாக்கி வரி ஏய்ப்பு செய்துள்ளதை கண்டறிந்துள்ளது. மேலும் இந்த நிறுவனத்திற்கு சொந்தமான 40 இடங்களில் வருமானவரித்துறையினர் அதிரடி சோதனையை மேற்கொண்டுள்ளனர். இந்த சோதனையின் முடிவில் அங்கு என்னென்ன ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன? எம்மாதிரியான முறைகேடுகள் நடந்துள்ளன என்பது குறித்து விரிவான விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.