ஈரோட்டில் விசைத்தறிக்கான இலவச மின்சாரத்தின் அளவு 750 யூனிட்டில் இருந்து 1,000 யூனிட்டாக உயர்த்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து அமைப்புச் செயலாளர் கந்தவேல் கூறுகையில், சட்டப்பேரவை பொதுத்தேர்தலின்போது விசைத்தறிக்கான இலவச மின்சாரத்தின் அளவு 1,000 யூனிட்டாக உயர்த்தப்படும் என திமுக வாக்குறுதி அளித்தது. ‘இதை நிறைவேற்ற வேண்டும்; மின் கட்டண உயர்வைக் குறைக்க வேண்டும்’ என வேண்டுகோள் விடுத்திருந்தோம். அதன்படி, விசைத்தறிக்கான இலவச மின்சாரத்தின் அளவு 750 யூனிட்டில் இருந்து 1,000 யூனிட்டாகவும், கைத்தறி நெசவாளர்களுக்கான இலவச மின்சார அளவு 200 யூனிட்டில் இருந்து 300 யூனிட்டாகவும் உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
மேலும், எங்களது கோரிக்கையை ஏற்று, 1,000 முதல் 1,500 யூனிட் வரையிலான மின்கட்டணத்தில் யூனிட்டுக்கு 35 பைசாவும், 1,500 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்துவோருக்கு யூனிட்டுக்கு 70 பைசாவும் குறைக்கப்பட்டுள்ளது. இதற்கான மானியத்தை அரசு வழங்குவதாக அறிவித்துள்ளது. 1.60 லட்சம் மின் இணைப்புகள் உள்ள நிலையில், விசைத்தறியாளர்கள் பயன்பெறுவர் என கூறினார்.