பத்திரிகையாளர்களின் குடும்ப உதவி நிதி உயர்வு குறித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் பணியில் இருக்கும் பத்திரிகையாளர்கள் உயிரிழந்தால் அவர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் நிதி உதவியினை தமிழக அரசு உயர்த்தி அறிவித்துள்ளது. தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தியில், சென்னை பத்திரிகையாளர் மன்றத்தினர் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் பத்திரிகையாளர்கள் மரணமடைந்தால் அவர்களின் குடும்பத்திற்கு வழங்கப்படும் நிவாரண நிதியை ரூ.10 லட்சமாக உயர்த்த கோரிக்கை வைத்திருந்தனர். அதன் அடிப்படையில், 20 ஆண்டுகள் பணிபுரிந்த பத்திரிகையாளர்களின் குடும்பத்திற்கு ரூ.10,00,000 (பத்து இலட்சம்), 15 ஆண்டுகள் பணிபுரிந்தவர்கள் ரூ.7,50,000 (ஏழு இலட்சத்து ஐம்பதாயிரம்), 10 ஆண்டுகள் பணிபுரிந்தவர்கள் ரூ.5,00,000 (ஐந்து இலட்சம்), 5 ஆண்டுகள் பணிபுரிந்தவர்கள் ரூ.2,50,000 (இரண்டு இலட்சத்து ஐம்பதாயிரம்) வழங்கப்படும் என அரசின் புதிய அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.