காவேரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடரும் கனமழையால் ஒகேனக்கல் அருவிக்கு நீர்வரத்து 50000 கனஅடியாக அதிகரித்துள்ளது.
கர்நாடக மாநிலம் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகள் மற்றும் கேரளா, வயநாடு உள்ளிட்ட பகுதிகளில் மீண்டும் தொடர்மழை ஏற்பட்டுள்ளது. இதனால், கபனி மற்றும் கே.எஸ் அணை வேகமாக நிரம்பி வருகிறது. கே.எஸ்.அணையில் இருந்து வினாடிக்கு 19,783 கனஅடி நீரும், கபனி அணையில் இருந்து 7,000 கனஅடி நீரும் தமிழத்திற்கு திறக்கப்பட்டுள்ளது. இந்த நீர் திறப்பால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
அதிக நீர்வரத்தின் காரணமாக ஒகேனக்கல்லில் உள்ள அருவிகள் ஐந்தருவி, சினி அருவி, மெயின் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இந்நிலையில், இன்று நீரின் அளவு வினாடிக்கு 50,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. அதிக நீர்வரத்து காரணமாக பரிசல் இயக்கவும், அருவியில் குளிக்கவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
நீர்வார்த்து அதிகரிக்கும் என்பதால் காவிரி கரையோர மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பாக வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.