பள்ளிக்கரணை சதுப்பு நிலத்திற்கு வெளிநாட்டு பறவைகளின் வருகை அதிகரித்துள்ளது.
மிச்சாங் புயல் காரணமாக சோழிங்கநல்லூர், பள்ளிக்கரணை துரைப்பாக்கம், பெருங்குடி, மேடவாக்கம் உள்ளிட்ட பல பகுதிகளில் மழை வெள்ளம் ஆறாக பெருகியது. இதில் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்திற்கு ஏற்கனவே ஏராளமான வெளிநாட்டு பறவைகள் வந்திருந்தன. இவை புயல் காரணமாக வெவ்வேறு இடங்களுக்கு சென்று விட்டன. அதன் பின்னர் தற்போது மழை நின்றதும் மீண்டும் வெளிநாட்டு பறவைகள் உள்ளிட்ட புதிய அரியவகை பறவைகள் வரத் தொடங்கியுள்ளன. இதில் ஏராளமான கூழைக்கடா பறவைகள் வந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இங்கு வழக்கமாக வெள்ளை நிற கூழைக்கடா மட்டுமே வருகை தரும். தற்போது கருப்பு நிறக் கூழைக்கடாக்கள் வந்திருப்பது தெரியவந்துள்ளது. சில நாட்களுக்கு முன்பு பழுப்பு நிற கூழைக்கடா வந்திருந்தன. தற்போது பள்ளிக்கரணை சதுப்பு நில பகுதிகளில் அதிக தண்ணீர் உள்ளதால் வெளிநாட்டு பறவைகளின் வரவு அதிகமாக உள்ளது. இவற்றை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.