வெயில் தாக்கம் அதிகரிப்பால் ராமநாதபுரம் மாவட்டத்தில் உப்பு உற்பத்தி அதிகரித்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் 100க்கும் மேற்பட்ட உப்பு நிறுவனங்களின் உப்பு உற்பத்தி மற்றும் தயாரிப்பு தொழிற்சாலைகள் உள்ளன. ராமநாதபுரம் மாவட்ட மன்னார் வளைகுடா கடலின் உப்பு தண்ணீரில் உப்பு உற்பத்திக்கு தேவையான அடர்த்தி வெப்பநிலை இயற்கையாகவே கிடைக்கிறது. கடந்த மார்ச் மாதம் உப்பளத்திற்கு தேவையான வெப்பநிலை கிடைத்துள்ளதால் மாவட்டத்திலுள்ள அனைத்து பகுதிகளிலும் உப்பளம் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வந்தது.
இந்நிலையில் கடந்த ஏப்ரல் கடைசியில் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. இதனால் உப்பு உற்பத்தி பணிகள் பாதிக்கப்பட்டதால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் மீண்டும் வெயிலின் தாக்கம் அதிகரித்ததால் கடந்த மாதம் முதல் மாவட்டம் முழுவதும் உப்பு உற்பத்தி பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இன்னும் 3 மாதத்திற்கு உப்பு விளைச்சல் அமோகமாக கிடைக்கும் என நம்பப்படுகிறது.