நம் அண்டை நாடான வங்கதேச எல்லையில் அதிகளவில் ஊடுருவல் நடப்பது மிகப் பெரும் சவாலாக உள்ளது என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியா - வங்கதேச எல்லையில் உள்ள பிரச்னைகள் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் ஆண்டறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், வங்கதேசத்துடனான 4096 கி.மீ., எல்லையில் 3,145 கி.மீ., துாரத்துக்கு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. மற்ற இடங்களில் வேலி அமைக்கும் பணி 2024 ஏப்ர லுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. எல்லையில் வேலி அமைப்பதில் சில சிக்கல்கள் உள்ளன.
மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் சட்டவிரோதமாக நுழைந்த வங்கதேசத்தவர்கள் அதிகம் வசிக்கின்றனர். இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க எல்லையோர மாநிலங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளன. வங்கதேசத்தவர்கள் ஊடுருவுவது, சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவது போன்றவையே எல்லையில் சந்திக்கும் மிகப் பெரும் சவாலாக உள்ளது என்று அதில் கூறப்பட்டுள்ளது.