இந்தியாவில் வாகனங்களின் சில்லறை விற்பனை கடந்த ஆண்டை விட 8% சதவீதம் உயர்ந்துள்ளதாக, இந்திய வாகன வியாபாரிகள் சங்கம் (FADA) தெரிவித்துள்ளது. மேலும், ட்ராக்டர்களைத் தவிர, பிற வாகனங்களின் விற்பனை உயர்ந்துள்ளதாக கூறியுள்ளது.
வாகன வியாபாரிகள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கடந்த ஓராண்டில், இருசக்கர வாகன விற்பனையில் 8.5 சதவீதமும், மூன்று சக்கர வாகன விற்பனையில் 83 சதவீதமும், பயணிகள் வாகன விற்பனையில் 6.5 சதவீதமும், சரக்கு வாகன விற்பனையில் 24 சதவீதமும் உயர்வு காணப்பட்டுள்ளது. ஆனால், ட்ராக்டர் விற்பனையில் 32 சதவீதம் சரிவு காணப்பட்டுள்ளது. மேலும், கொரோனாவுக்கு முந்தைய 2019 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், இது 7% குறைவாகும். கொரோனாவிற்கு முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில், பயணிகள் வாகன விற்பனை 41 சதவீதமும், சரக்கு வாகன விற்பனை 6 சதவீதமும் உயர்ந்துள்ளது. ஆனால், இருசக்கர வாகன விற்பனையில் 16 சதவீதமும், மூன்று சக்கர வாகன விற்பனையில் 1 சதவீதமும், டிராக்டர் விற்பனையில் 7 சதவீதமும் சரிவு காணப்பட்டுள்ளது.
முறையான பருவ மழை இல்லாததால், அதன் பாதிப்பு, வாகன விற்பனையிலும் பிரதிபலித்ததாக கூறப்படுகிறது. அதனாலேயே குறிப்பிட்ட சில வாகனங்களின் விற்பனை சரித்துள்ளதாகக் கருதப்படுகிறது. அத்துடன், செமி கண்டக்டர் வரவு அதிகரித்துள்ளதால் வரவிருக்கும் பண்டிகை காலத்தில் வாகன விற்பனை அதிகரிக்கக்கூடும் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இது குறித்து சங்கத்தின் தலைவர் மனிஷ் ராஜ் சிங்கானியா கூறுகையில், “வாகனங்களின் ஒட்டுமொத்த சில்லறை விற்பனையில் 8% உயர்வு காணப்படுகிறது. அத்துடன், பண்டிகை கால விற்பனைக்கு இது முதல் படி ஆகும். எனினும், பருவ மழை பொய்த்ததன் காரணமாக வாகன விற்பனை சற்று குறைந்துள்ளது” என்று கூறியுள்ளார்
மேலும், இனி வரும் காலங்களில், மின்சார வாகனத்துறையில் நல்ல முன்னேற்றத்தை எதிர்நோக்குவதாக அவர் கூறினார். அத்துடன், செப்டம்பர் மாதத்தில் ஓணம், நவராத்திரி உள்ளிட்ட பண்டிகைகளும், அக்டோபர் மாதத்தில் தீபாவளி பண்டிகையும் தொடர்ச்சியாக வரவிருப்பதால் வாகன விற்பனை மேலும் அதிகரிக்கும் என்று நம்புவதாகக் கூறினார்.