ஹெச் சி எல் டெக் நிறுவனம், நேற்று தனது மூன்றாம் காலாண்டு நிதிநிலை அறிக்கையை வெளியிட்டது. அதில், நடப்பு நிதியாண்டுக்கான நிறுவனத்தின் வளர்ச்சி 13.5 முதல் 14% வரை இருக்கும் என்ற கணிப்பு தெரிவிக்கப்பட்டிருந்தது. அதைத் தொடர்ந்து, இன்றைய வர்த்தக நாளின் தொடக்கத்தில், நிறுவனத்தின் பங்கு மதிப்பு 3% வரை சரிந்தது. மும்பை பங்குச் சந்தையில், ஹெச் சி எல் பங்குகள் 2.78% குறைந்து ஒரு பங்கு 1042 ரூபாய்க்கு வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையில் நிறுவனத்தின் பங்குகள் 2.86% குறைந்து 1041 ரூபாய்க்கு வர்த்தகமானது.
ஹெச் சி எல் டெக் நிறுவனம், தனது நிகர வருவாய் 19% அதிகரித்து 4096 கோடியாக பதிவாகியுள்ளதாக, காலாண்டு நிதிநிலை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. மேலும், டிசம்பர் மாதத்துடன் நிறைவடைந்த மூன்றாம் காலாண்டில், பல்வேறு துறைகளில் நிறுவனம் முன்னேற்றம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், முதல் முறையாக, வரிக்கு முன்னான, நிறுவனத்தின் நிகர வருவாய் 5000 கோடி ரூபாயைத் தாண்டி பதிவாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.