இந்தியாவிலேயே முதல் முறையாக இரவு நேர மோட்டார் பந்தயம் நடத்தப்பட உள்ளது. சென்னையில், வரும் டிசம்பர் 9, 10 தேதிகளில், இந்த போட்டி நடத்தப்பட உள்ளதாக தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார். அத்துடன், தெற்காசிய நாடுகளிலேயே முதல்முறையாக இரவு நேர மோட்டார் பந்தயம் நடத்தப்பட உள்ளதாக கூறியுள்ளார்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், சென்னை பெருநகர வளர்ச்சி ஆணையம், பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் ரேசிங் ப்ரோமோஷன் பிரைவேட் லிமிடெட் ஆகியவை இணைந்து இரவு நேர மோட்டார் பந்தயத்தை நடத்த உள்ளன. இதற்கு சென்னை பார்முலா ரேசிங் சர்க்யூட் என்று பெயரிடப்பட்டுள்ளது. நேற்று நடைபெற்ற விழாவில், பந்தயத்திற்கான இலச்சினை அறிமுகம் செய்யப்பட்டது. மேலும், டிசம்பர் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான 2 சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற உள்ளன. இதில், பல்வேறு உலக நாடுகளில் இருந்து போட்டியாளர்கள் கலந்து கொள்ள உள்ளனர். சென்னை தீவுத்திடல் மைதானத்தில் 3.5 கிலோமீட்டர் தொலைவுக்கு ஃபார்முலா பந்தயம் நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.














