உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஏவுகணை கப்பலை இந்தியா வியட்நாமுக்கு பரிசளிக்கிறது.
இரண்டு நாள் பயணமாக நேற்று புதுடெல்லி வந்த வியட்நாம் பாதுகாப்புத் துறை அமைச்சர் பான் வான் கியாங், ராஜ்நாத் சிங்கை இன்று சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது பேசிய ராஜ்நாத் சிங், கடந்த ஆண்டு ஜூன் மாதம் நான் வியட்நாம் வந்தபோது, இரு நாடுகளுக்கு இடையே பாதுகாப்பு தளவாட ஆதரவு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. மேலும், கூட்டு தொலைநோக்கு அறிக்கையும் வெளியிடப்பட்டது. இந்த அறிக்கை நமது பாதுகாப்பு ஒத்துழைப்பின் நோக்கத்தையும் அளவையும் மேம்படுத்தி உள்ளது. மேலும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஐஎன்எஸ் கிர்பான், வியட்நாமுக்கு பரிசாக வழங்கப்படும் என அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு தொழில்நுட்பத்தில் கட்டப்பட்ட ரோந்து கப்பலான ஐஎன்எஸ் கிர்பான், ஏவுகணையை ஏந்திச் செல்லக்கூடிய திறன் வாய்ந்தது. வியட்நாம் கடற்படையின் திறனை மேம்படுத்துவதில் ஐஎன்எஸ் கிர்பான் முக்கிய மைல்கல்லாக இருக்கும் என இந்திய பாதுகாப்பு அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.














