தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தால் இந்தியாவுக்கு கூடுதல் விசா கிடையாது என்று இங்கிலாந்து அமைச்சர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இந்தியா-இங்கிலாந்து இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் கடந்தாண்டு தீபாவளியையொட்டி கையெழுத்திட அப்போதைய பிரதமர் போரிஸ் ஜான்சன் திட்டமிட்டிருந்தார். இதனிடையே அவர் பதவி விலகியதால், ஒப்பந்தம் கையெழுத்தாவது தள்ளிப் போனது. இது தொடர்பாக இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. இந்நிலையில், ஆங்கில நாளிதழுக்கு இங்கிலாந்து வர்த்தக அமைச்சர் கெமி படேனோச் அளித்த பேட்டியில், "ஆஸ்திரேலியா உடனான இங்கிலாந்தின் தடையற்ற வர்த்தக ஒப்பந்தமும் இந்தியா உடனான ஒப்பந்தமும் ஒரே மாதிரியானவை.
விசா விவகாரத்தை பொறுத்தவரை, ஆஸ்திரேலியாவுக்கு அனுமதிக்கப்பட்டதை போல் இந்தியாவுக்கு வழங்கப்படாது. இந்தியா-இங்கிலாந்து இடையேயான இளம் தொழில் வல்லுநர்கள் திட்டத்தின் கீழ், இரு நாடுகளிலும் அந்நாடுகளை சேர்ந்த 18-30 வயதுடைய பட்டதாரிகள் 2 ஆண்டுகள் மட்டும் தங்கவும் பணியாற்றவும் ஆண்டுக்கு 3,000 பேருக்கு விசா வழங்கப்படும். தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாவதால் இந்தியாவுக்கு கூடுதல் விசா சலுகைகள் வழங்கப்பட மாட்டாது,’’ என்று தெரிவித்தார்.