உலகில் நான்காம் தொழிற்புரட்சியை வழிநடத்தும் தகுதி இந்தியாவுக்கு இருக்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
தொழில்துறை 4.O கருத்தரங்கில் பிரதமர் நரேந்திர மோடியின் செய்தி வாசிக்கப்பட்டது. தொழில்துறையின் இணை செயலாளர் அதனை வாசித்தார். அதில் பிரதமர் மோடி, இதற்கு முன் ஏற்பட்ட தொழிற்புரட்சிகளை இந்தியாவால் பயன்படுத்திக்கொள்ள முடியவில்லை. ஆனால், 4வது தொழிற்புரட்சியை வழிநடத்தும் ஆற்றல் இந்தியாவுக்கு இருக்கிறது. ஏனெனில், போதுமான மனித வளம், தேவை, தீர்க்கமான அரசு என அனைத்தும் இம்முறை ஒன்றாக இணைந்துள்ளன.
உற்பத்தியில் உலகின் மிக முக்கிய நாடாக இந்தியாவை நிலைநிறுத்துவதில் பொருளாதாரத்திற்கும் வணிகத்திற்கும் முக்கிய பங்கு இருக்கிறது. இதை உணர்ந்து, தற்போதைய அரசு தொழில்நுட்பங்கள் மூலம் நடைபெறும் உற்பத்திக்கான உலக மையமாக இந்தியாவை மாற்றத் தேவையான சீர்திருத்தங்கள் மற்றும் ஊக்குவிப்புகளை செய்து வருகிறது என்று அவர் தெரிவித்திருந்தார்.