உலக அரங்கில் இந்தியா வளர்ந்த நாடாக மாறி வருகிறது என்று மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் பெருமிதத்துடன் கூறினார்.
இந்திய கணக்கு தணிக்கையாளர் கல்வி நிறுவனம் சிஏ எனப்படும் கணக்கு தணிக்கையாளர் தேர்வை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. சிஏ தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு தேர்ச்சி சான்றிதழ் வழங்கும் பட்டமளிப்பு விழா டெல்லியில் நேற்று நடந்தது. இந்நிகழ்ச்சியில் சென்னை உட்பட13 மையங்களில் இருந்து மாணவர்கள் இணைய வழியில் கலந்துகொண்டனர்.
பட்டமளிப்பு விழாவில் பேசிய அமைச்சர் பியூஷ் கோயல், சிஏ தேர்வை நடத்தும் அமைப்பான இந்திய கணக்கு தணிக்கையாளர் கல்வி நிறுவனம், இந்தியா மட்டுமின்றி 47 நாடுகளில் 168 கிளைகளுடன் இயங்கி வருகிறது. தற்போது இந்தியாவில் 3 லட்சத்து 50 ஆயிரம் சிஏ பட்டதாரிகள் உள்ளனர். அவர்களில் 28 சதவீதம் பேர் பெண்கள். ஏறத்தாழ 7 லட்சத்து 50 ஆயிரம் பேர் சிஏ படித்து வருகின்றனர். அவர்களில் 45 சதவீதம் பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய சூழலில் உலக அரங்கில் இந்தியா வளர்ந்த நாடாக மாறிவருகிறது. இந்தியாவின் வளர்ச்சியில் சிஏ பட்டதாரிகள் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை அளிக்க முடியும் என்றார்.
நாட்டின் 75-வது ஆண்டு சுதந்திர தினவிழாவின்போது உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, 2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவது, காலனியாதிக்க மனோபாவத்தை துடைத்தெறிவது உள்ளிட்ட ஐந்து உறுதிமொழிகளை முன்வைத்தார்.அதன்படி சிஏ பட்டதாரிகள் பணியாற்ற வேண்டும் என்று அமைச்சர் பியூஷ் கோயல் கூறினார்.
இதைத்தொடர்ந்து, சென்னையில் நடந்த நேரடி பட்டமளிப்பு விழாவில் 1500 பேர் சிஏ பட்டம் பெற்றனர். சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு சென்னை மண்டல தலைவர் சின்னமஸ்தான் தலக்காயலா பதக்கங்களையும், சான்றிதழ்களையும் வழங்கினார்.