இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் செப்டம்பர் 7ஆம் தேதி, அரசு முறைப் பயணமாக டோக்கியோ சென்றுள்ளார். அங்கு அவர் ஜப்பானின் பாதுகாப்பு அமைச்சர் யசுக்காஸு ஹமாடாவை சந்தித்தார். இருவரும் இந்தியா - ஜப்பான் ராணுவ அமைச்சகக் கூட்டத்தில் பங்கேற்றனர். அப்போது, இருநாட்டு விமானப் படைகளும் போர் ஒத்திகை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்தோ பசிபிக் பிராந்தியத்தில், சுதந்திரத்துடன் கூடிய விதிகளின் கீழ் செயல்பட இந்தியா மற்றும் ஜப்பான் நாடுகளின் பாதுகாப்பு துறை முக்கிய பங்காற்றுகிறது. எனவே, இருநாட்டு பாதுகாப்பு அமைச்சர்களும் இது பற்றி விவாதிக்க டோக்கியோவில் சந்தித்தனர். பாதுகாப்பு கருவிகள் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த ஒத்துழைப்புக்கு இரு நாடுகளும் இணைந்து பங்காற்ற இந்த சந்திப்பின் போது முடிவெடுக்கப்பட்டது. குறிப்பாக, ‘தர்மா கார்டியன்’, ‘ஜிமேக்ஸ்’ மற்றும் ‘மலபார்’ போன்ற பல தரப்பு பாதுகாப்பு நடவடிக்கைகளில், இரு நாடுகளும் இணைந்து செயலாற்ற முடிவு செய்யப்பட்டது. இது குறித்த அறிக்கைக்கு இருநாட்டு பாதுகாப்பு அமைச்சர்களும் ஒப்புதல் வழங்கியுள்ளனர்.
அத்துடன், மார்ச் மாதத்தில் நடந்த மிலன் ஒத்திகைக்கு ஆதரவு அளித்ததற்காக பரஸ்பர நன்றிகள் தெரிவிக்கப்பட்டன. முந்தைய போர் ஒத்திகையின் போது, இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு மற்றும் இணைந்து பணியாற்றும் தன்மை போன்றவை அதிகரித்ததை சுட்டிக்காட்டி, தொடர்ந்து, ராணுவ போர் ஒத்திகைகளை இணைந்து நடத்த ஏற்பாடுகள் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தின் மூலம் இரு நாடுகளுக்கு இடையிலான நல்லுறவு மேம்பட்டிருப்பதாகவும், ராணுவ உறவு வலுப்பட்டிருப்பதாகவும், சர்வதேச கூட்டணி நீடித்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.