இன்று, 2023 ஆம் ஆண்டுக்கான வெளிநாட்டு வர்த்தக கொள்கையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. வரும் ஏப்ரல் 1 முதல், இந்த புதிய கொள்கை செயல்பாட்டுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரையில், 5 ஆண்டுகால முறையில் கொள்கைகள் வகுக்கப்பட்டு வந்தன. ஆனால், இந்த முறை, 5 ஆண்டு கால மரபு உடைக்கப்பட்டு, காலவரையற்ற கொள்கை வெளியிடப்பட்டுள்ளது.
இந்தியாவின் வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல், வெளிநாட்டு வர்த்தக கொள்கையை வெளியிட்டார். மேலும், வரும் மார்ச் 31ம் தேதியுடன், 2015 முதல் 2020 வரை வகுக்கப்பட்ட வெளிநாட்டு வர்த்தக கொள்கை நிறைவு பெறுவதாக அறிவித்தார். கொரோனா மற்றும் உக்ரைன் - ரஷ்யா போர் காரணமாக இந்தக் கொள்கை 2023 வரை நீட்டிக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து பேசிய அவர், “2023 ஆம் நிதி ஆண்டில், இந்தியா 760 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான ஏற்றுமதியை பதிவு செய்து புதிய வரலாறு படைக்க உள்ளது. அந்த வகையில், 2030 ஆம் ஆண்டுக்குள் 2 ட்ரில்லியன் டாலர் மதிப்பிலான ஏற்றுமதி இலக்கை எட்ட முடியும் என்று நம்பப்படுகிறது. மேலும், கொரியர் மூலம் செய்யப்படும் ஒவ்வொரு ஏற்றுமதிகளின் மதிப்பு 5 லட்சத்திலிருந்து 10 லட்சமாக உயர்த்தப்படுகிறது” என்று கூறினார்.