காஷ்மீர் பகுதியில் இந்திய ராணுவம் பயங்கரவாதிகள் தங்கியிருந்த முகாம்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியது.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய பயங்கரத் தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். இந்த கொடூரத் தாக்குதலுக்கு பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இதனைத் தொடர்ந்து, பிரதமர் மோடி தலைமையில் முப்படை தளபதிகள் மற்றும் பாதுகாப்பு செயலாளர் உள்ளிட்டோர் கலந்து கொண்ட முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தியா பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், நாடு முழுவதும் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பாதுகாப்பு ஒத்திகைகள் நடத்த உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இந்த சூழ்நிலையில், இன்று அதிகாலை ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இந்திய ராணுவம் பயங்கரவாதிகள் தங்கியிருந்த முகாம்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியது. இந்த அதிரடி நடவடிக்கைக்கு ‘ஆபரேஷன் சிந்தூர்’ என பெயரிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.