வரும் 2030 ஆம் ஆண்டு இஸ்ரோவின் அடுத்த செவ்வாய் கிரகத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்தின் பகுதியாக, ஹெலிகாப்டர் ஒன்றை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்ப உள்ளதாக இஸ்ரோ கூறியுள்ளது.
நாசாவின் இன்ஜெனியூனிட்டி ஹெலிகாப்டர் அண்மையில் தனது பறக்கும் செயல்பாடுகளை நிறுத்தியது. அதைத் தொடர்ந்து, தற்போது, செவ்வாய் கிரகத்திற்கு விண்கலம் அனுப்பும் திட்டத்தில் பணியாற்றி வரும் இஸ்ரோ, புதிதாக ஹெலிகாப்டர் ஒன்றையும் அனுப்ப திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளது. விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் பணியாற்றி வரும் விஞ்ஞானி ஜெயதேவி பிரதீப் கருத்தரங்கு ஒன்றில் இதனை பற்றி தெரிவித்துள்ளார். ஹெலிகாப்டர் வடிவமைக்கும் பணிகளில் விஞ்ஞானிகள் தற்போது ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த ஹெலிகாப்டரில், வெப்பநிலை, ஈரப்பதம், காற்று வேகம் உள்ளிட்டவற்றை கண்காணிக்கும் பல்வேறு தொழில்நுட்ப சாதனங்கள் இணைக்கப்படுவதாக கூறியுள்ளார். இது செவ்வாய் கிரக பரப்பிலிருந்து 100 மீட்டர் உயரத்துக்கு பறக்கும் என கூறியுள்ளார்.