சில அமெரிக்க பொருட்கள் மீதான கூடுதல் வரியை நீக்குவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
இது குறித்து மத்திய நிதி அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், ஆப்பிள், வால்நட், பாதாம், மசூர் பருப்பு மற்றும் கொண்டக்கடலை உள்ளிட்ட 6 அமெரிக்க பொருட்கள் மீது விதிக்கப்பட்ட கூடுதல் வரி நீக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த 2019 ஆம் ஆண்டு உருக்கு மற்றும் அலுமினிய பொருட்கள் மீதான வரியை அமெரிக்கா அதிகரிக்க முடிவு செய்தது. அதற்கு பதில் தரும் விதமாக 28-க்கும் மேற்பட்ட அமெரிக்க தயாரிப்புகள் மீது கூடுதல் வரியை இந்தியா அமல்படுத்தியது. இந்நிலையில் தற்போது இரு நாடுகளுக்கும் இடையே விண்வெளி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இணக்கமான போக்கு ஏற்பட இந்த வரி நீக்கம் செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் மாதம் பிரதமர் மோடி அமெரிக்கா சென்றிருந்தார். அப்போது மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, கொண்டைக் கடலை (10 சதவீதம்), பருப்பு (20 சதவீதம்), உலர்ந்த பாதாம் பருப்பு (கிலோவுக்கு ரூ.7), பாதாம் பருப்பு (கிலோவுக்கு ரூ.20), வால்நட் (20 சதவீதம்), ஆப்பிள் (20 சதவீதம்) ஆகியற்றின் மீது விதிக்கப்படும் கூடுதல் வரியை நீக்குவது என முடிவு செய்யப்பட்டது.
தற்போது இந்தியாவின் நெருங்கிய வர்த்தக கூட்டாளியாக அமெரிக்கா இருக்கிறது. கடந்த 2021-22-ம் ஆண்டு இருதரப்பு இடையிலான வர்த்தகம் முந்தைய ஆண்டின் 11,950 கோடி டாலரில் இருந்து 12,880 கோடி டாலராக அதிகரித்தது.