கடந்த ஆகஸ்ட் மாதத்தில், இந்தியாவில் பதிவாகியுள்ள மொத்த மழைப்பொழிவு, கடந்த நூற்றாண்டு அளவில் மிகவும் குறைந்தபட்சமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் இந்த செய்தியை தெரிவித்துள்ளது. சராசரியாக, ஆகஸ்ட் மாதத்தில் பதிவாகும் மழை பொழிவை விட இந்த வருடம் 36% குறைவான மழைப்பொழிவு பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்தியாவைப் பொறுத்தவரை, ஆகஸ்ட் மாதத்தில் அதிகபட்ச மழைப்பொழிவு பதிவு செய்யப்படும். ஆனால், இந்த வருடம், எல் நினோ விளைவு காரணமாக, மழை பொழிவு பற்றாக்குறை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. ஆனால், வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் இமாலய மாநிலங்களில், விதிவிலக்காக, அதிக மழைப்பொழிவு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை, சீரான மழைப்பொழிவு ஏற்பட்டுள்ளது. -இவ்வாறு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த 2005 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், சராசரி அளவைவிட 25% குறைவான மழை பொழிவு ஏற்பட்டது. அப்போது, இந்தியா கடும் வறட்சியை பதிவு செய்தது. தற்போது, கடந்த நூற்றாண்டின் மிகக் குறைந்த மழைப்பொழிவு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், செப்டம்பர் மாதத்தில் சீரான மழைப்பொழிவு ஏற்படும் என எதிர்பார்ப்பதாக வானிலை மையம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.