கடந்த செவ்வாய்க்கிழமை அன்று, உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பிரித்வி 2 ஏவுகணை சோதனையை, இந்தியா வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளது. இது குறித்து பாதுகாப்பு அமைச்சகம் செய்திக் குறிப்பு வெளியிட்டுள்ளது.
பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்திக் குறிப்பில், இந்த ஏவுகணை சோதனை மூலம் இந்தியாவின் அணு ஆயுத வலிமை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த ஏவுகணை, இலக்கை துல்லியமாக தாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒடிசாவின் சாந்திபூர் கடற்கரை பகுதியில் இந்த ஏவுகணை சோதனை நிகழ்த்தப்பட்டது.
தற்போது நடத்தப்பட்ட ஏவுகணை சோதனை மூலம் ஏவுகணையின் தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் செயல்பாடுகள் சரிபார்க்கப்பட்டன. பிரித்வி 2 ஏவுகணை, 350 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலக்கை துல்லியமாக தாக்கும் சக்தி படைத்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது.