உலக பல்கலைக்கழக தரவரிசை பட்டியலில், முதல் முறையாக இந்தியா முதலிடத்தை பிடித்துள்ளது. முதல் 100 பல்கலைக்கழகங்களில் இந்தியாவிலிருந்து 7 பல்கலைக்கழகங்கள் இடம்பெற்றுள்ளன. அதன்படி, சீனாவை பின்னுக்குத் தள்ளி, இந்தியா முதலிடம் பிடித்துள்ளது.
பிரிட்டனை தலைமையாக கொண்டு செயல்படும் கியூ எஸ் என்ற நிறுவனம், உலக பல்கலைக்கழக தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. உயர்கல்வி நிறுவனங்களில் பணி செய்யும் பேராசிரியர்களின் ஆய்வுகள் சமர்ப்பிப்பு, பல்கலைக்கழகத்தின் கல்வி முறை, ஊழியர்களுக்கான மதிப்பு, ஆசிரியர் மாணவர் விகிதாச்சாரம் போன்ற பல்வேறு காரணிகளின் அடிப்படையில் இந்த தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில், 148 உயர்கல்வி நிறுவனங்கள் இந்தியாவில் இருந்து இடம் பிடித்துள்ளன. இந்தியாவுக்கு அடுத்ததாக சீனாவில் இருந்து 133 பல்கலைக்கழகங்களும், ஜப்பானிலிருந்து 96 பல்கலைக்கழகங்களும் இடம் பிடித்துள்ளன. சீனாவின் பீச்சிங் பல்கலைக்கழகம் முதல் இடத்தை தக்க வைத்துள்ளது. இந்தியாவிலிருந்து, மும்பை ஐஐடி, பெங்களூரு ஐஐஎஸ்சி, சென்னை ஐஐடி, டெல்லி ஐஐடி, கான்பூர் ஐஐடி, காரக்பூர் ஐஐடி, டெல்லி பல்கலைக்கழகம் ஆகியவை இடம் பிடித்துள்ளன. மேலும், கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் 2022 வரை, இந்தியாவில் இருந்து பதிவு செய்யப்பட்ட ஆராய்ச்சிகளின் விகிதம் 60% உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், உயர்கல்வி நிறுவனங்களில் பிஹெச்டி அல்லது ஆராய்ச்சி மேற்படிப்பு முடித்த பேராசிரியர்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.














