இந்திய வம்சாவழியைச் சேர்ந்த அமெரிக்க மாணவி நடாஷா பெரியநாயகம், உலகின் புத்திசாலி மாணவர்கள் பட்டியலில் தொடர்ந்து 2ம் முறையாக இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
அமெரிக்காவைச் சேர்ந்த ஜான்ஸ் ஹாப்கின்ஸ் சென்டர் ஃபார் டேலன்டட் யூத் நிறுவனம், ஆண்டுதோறும் தேர்வு நடத்தி திறமையான மாணவர்களை பட்டியலிட்டு வருகிறது. கடந்த 2022 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்வில் 76 நாடுகளைச் சேர்ந்த 15300 மாணவர்கள் பங்கேற்றனர். இதில் 27% மாணவர்கள் மட்டுமே பட்டியலில் இடம் பிடித்துள்ளனர். இதில் இரண்டாம் முறையாக இடம் பிடித்துள்ள நடாஷா பெரியநாயகம், மற்ற மாணவர்களை விட அதிக மதிப்பெண் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
இவர் நியூ ஜெர்சியில் உள்ள பிளாரன்ஸ் எம்.கவுதினீர் நடுநிலைப் பள்ளியில் பயின்று வருகிறார். சென்டர் ஃபார் டேலன்டட் யூத் நடத்திய தேர்வில், அமெரிக்க கல்லூரிகளில் சேர்வதற்கான எஸ்ஏடி, ஏசிடி, மற்றும் பிற கல்வி நிறுவனங்களின் திறனறி தேர்வுகள் போன்றவற்றில் கேட்கப்படும் கேள்விகள் இடம் பெற்றிருந்தன அவற்றில் நடாஷா தேர்ச்சி பெற்று, முன்னிலை வகித்துள்ளது குறிப்பிடத்தக்கது.