கடன் பத்திரங்கள் வெளியிடுவதன் மூலம், இந்திய வங்கிகள் திரட்டியுள்ள மூலதனம், நடப்பு நிதி ஆண்டில் புதிய உச்சத்தை எட்டி உள்ளது. பிரபல சந்தை மதிப்பீட்டு நிறுவனமான ஐக்ரா இந்த விவரங்களை வெளியிட்டுள்ளது.
இந்திய வங்கிகளில் உள்ள கையிருப்புத் தொகை மற்றும் அவை வழங்கும் கடன் தொகை ஆகியவற்றுக்கு இடையில் பெரிய வேறுபாடு இருந்து வந்தது. குறிப்பாக, கடந்த டிசம்பர் 16ஆம் தேதி நிலவரப்படி, வங்கிகளில் உள்ள வைப்புத் தொகை மதிப்பு 8.9 லட்சம் கோடி ஆகவும், வங்கிகள் அளித்த கடன் மதிப்பு 12.7 லட்சம் கோடியாகவும் இருந்தது. எனவே, வங்கிகள் கடன் பத்திர வெளியீடு மூலம் மூலதனம் திரட்டுவதில் தொடர்ந்து ஆர்வம் காட்டி வந்தன.
இதன் காரணமாக, நடப்பு நிதி ஆண்டின் முதல் 9 மாதங்களில், சுமார் 90,000 கோடி மதிப்பில் மூலதனம் திரட்டப்பட்டுள்ளது. இதற்கு முன்னர், கடந்த 2017 ஆம் நிதியாண்டில் 80,000 கோடி ரூபாய் திரட்டப்பட்டதே அதிகபட்சமாக இருந்தது. இந்நிலையில், நடப்பு நிதி ஆண்டில் புதிய உச்சம் எட்டப்பட்டுள்ளது.