கனடாவில் வாகன விபத்தில் இந்திய தம்பதி அவர்களுடைய மூன்று மாத பேரக் குழந்தையுடன் உயிரிழந்தனர்.
கனடாவில் ஒண்டாரியோ மாகாணத்தில் பாமன்வில்லே என்ற நகர் உள்ளது. இங்கே உள்ள ஒரு மதுபான கடையில் கடந்த திங்களன்று கொள்ளை நடந்தது. இதில் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவரை பற்றி போலீசார் அறிந்து அவரை பிடிப்பதற்காக வாகனத்தில் துரத்தினர். அந்த சந்தேக நபர் சரக்கு வேனில் நெடுஞ்சாலை 401ல் தவறான பாதையில் வேகமாக சென்று கொண்டிருந்தார். காவல்துறை வாகனமும் அவரை அதே வேகத்தில் துரத்தி சென்றதாக கூறப்படுகிறது. அப்போது சந்தேக நபரின் வேன் எதிரே வந்த வாகனங்கள் மீது மோதி பெரும் விபத்துக்குள்ளானது. அடுத்தடுத்து ஆறு வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதியதில் அந்த சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்தது.
இந்த விபத்தில் இந்திய தம்பதி அவர்களுடைய மூன்று மாத பேரக் குழந்தையுடன் காரில் சென்றபோது உயிரிழந்தனர். விபத்து தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில், இந்தியாவைச் சேர்ந்த 60 வயது நபர், 55 வயது பெண் மற்றும் அவர்களின் மூன்று மாத பேரக் குழந்தை விபத்தில் பலியாகினர். அதே காரில் குழந்தையின் பெற்றோரும் பயணித்தனர். அவர்கள் பலத்த காயமடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.