அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் அமைப்பு, பணவீக்க உயர்வை கட்டுப்படுத்த மேற்கொண்டுள்ள சமீபத்திய நடவடிக்கைகள் மற்றும் கொள்கைகளால், இந்திய பங்குச் சந்தை தடுமாற்றம் அடைந்துள்ளது. கடந்த வாரத்தில் வீழ்ச்சியை சந்தித்த இந்திய பங்குச்சந்தை, இன்னும் அதில் இருந்து மீளவில்லை. இன்றும், கடும் வீழ்ச்சியை நோக்கியே இந்திய பங்குச் சந்தையின் செயல்பாடுகள் உள்ளன.
திங்கட்கிழமை காலையில், மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 57253.4 புள்ளிகளாக இருந்தது. இது முந்தைய வர்த்தக தினத்தை விட 1.46% அல்லது 845.52 புள்ளிகள் குறைவாகும். அதே வேளையில், தேசிய பங்குச் சந்தை நிஃப்டி குறியீட்டு எண் 17043.90 புள்ளிகள் ஆக இருந்தது. இது முந்தைய வர்த்தக நாளை விட 1.64% அல்லது 283.45 புள்ளிகள் குறைவாகும்.
அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் அமைப்பின் உயர்த்தப்பட்ட விகிதங்கள் மற்றும் கடுமையான நாணய கொள்கைகள் போன்றவற்றால் உலகளாவிய முறையில் பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் பாதிப்படைந்துள்ளனர். இது இந்திய பங்குச் சந்தையிலும் பிரதிபலித்தது. வெள்ளிக்கிழமை அன்று, சுமார் 4 லட்சம் கோடி இந்திய பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் இழப்பை சந்தித்தனர். அதே வேளையில், அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் அமைப்பின் இந்த உயர்த்தப்பட்ட விகித நிலை வரும் 2024 ஆம் ஆண்டு வரை தொடரும் என்று தெரிவித்துள்ளது, கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இந்தியாவின் அந்நியச் செலாவணி இருப்பு 14% குறைந்து உள்ளதும் பங்குச் சந்தை மீதான கவனத்தை குவித்துள்ளது. அத்துடன், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, இன்று மீண்டும் வரலாற்றுச் சரிவை சந்தித்துள்ளது. இன்று காலை டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 81.5 புள்ளிகள் ஆக இருந்தது. இந்த காரணங்களால், வரும் செப்டம்பர் 28ஆம் தேதி முதல் 30ம் தேதி வரை நடைபெற இருக்கும் மத்திய ரிசர்வ் வங்கியின் நாணய கொள்கை கூட்டம் மிகவும் கவனம் பெறுகிறது. அதில் 50 அடிப்படை புள்ளிகள் வரை ரெப்போ வட்டி விகிதம் உயர்த்தப்படலாம் என்று கருதப்படுகிறது.