“இந்தியாவின் டிஜிட்டல் தொழில்நுட்பம் எளிதானது; பாதுகாப்பானது; வெளிப்படையானது” என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் 6ஜி தகவல் தொழில்நுட்ப தொலைநோக்குத் திட்ட அறிக்கையை பிரதமர் நரேந்திர மோடி இன்று வெளியிட்டார். அப்போது பேசிய பிரதமர் மோடி, 5ஜி மொபைல் தொழில்நுட்பத்தை இந்தியா விரைவாக அறிமுகப்படுத்தி உள்ளது. 5ஜி தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்திய 6 மாதங்களுக்குள் நாம் தற்போது 6ஜி தொழில்நுட்பம் குறித்து பேசிக்கொண்டிருக்கிறோம். 5ஜி அறிமுகப்படுத்தப்பட்டு 120 நாட்களுக்குள் அதன் சேவை 125 மாநகரங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டிருக்கிறது.
நாட்டில் புதிதாக 100 5ஜி ஆய்வகங்கள் விரைவில் அமைய இருக்கின்றன. இந்தியாவின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் மாடல் என்பது எளிதானதாகவும், பாதுகாப்பானதாகவும், வெளிப்படையானதாகவும் இருக்கிறது. இந்த 10 ஆண்டுகள்(decade) என்பதை நாம் ‘Techade’ என குறிப்பிடலாம். கடந்த 2014ல் நாட்டில் இணைய பயனாளர்களின் எண்ணிக்கை 25 கோடியாக இருந்தது. அது தற்போது 85 கோடியாக உயர்ந்துள்ளது. இணைய சேவையை வழங்குவதற்காக 5 லட்சம் பொது சேவை மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன எனத் தெரிவித்தார்.