மும்பையில் செப்டம்பர் 20ஆம் தேதி குளோபல் ஃபின்டெக் ஃபெஸ்ட் 2022 என்ற நிகழ்வு நடைபெற்றது. பொருளாதார விவகாரத்துறை, நிதி அமைச்சகம், இந்திய அரசாங்கம், மத்திய ரிசர்வ் வங்கி, சர்வதேச நிதி சேவைகள் ஆணையம் (IFSCA), நேஷனல் பேமென்ட் கவுன்சில் ஆஃப் இந்தியா, பேமெண்ட் கவுன்சில் ஆஃப் இந்தியா (PCI), ஃபின்டெக் கன்வர்ஜென்ஸ் கவுன்சில் (FCC) ஆகியவற்றின் ஒருங்கிணைப்பில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்வில், முதல் முறையாக பல நாடுகளைச் சேர்ந்த துறைசார் வல்லுநர்கள் பங்கு பெற்றனர்.
அதில் பேசிய இந்தியாவின் தலைமை பொருளாதார ஆலோசகர் ஆனந்தா நாகேஸ்வரன், “உலகில் வேகமாக வளரும் ஃபின்டெக் சந்தையாக இந்தியா உள்ளது. இதன் ஃபின்டெக் சந்தை மதிப்பு, 2021 ஆம் ஆண்டில் 31 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது. இது, வரும் 2030ம் ஆண்டிற்குள், ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலர்களாக உயரும்” என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், “இந்தியாவில், பல்வேறு துறைகளில் பொது முதலீடுகள் அதிகரித்து வருவது நல்ல மாற்றத்திற்கான குறியீடாகும். மேலும், தொழில்நுட்பத் துறை மற்றும் நிதி துறையை இணைப்பதன் மூலம், நிதி துறையில் வாய்ப்புகள் அதிகரிக்கும்” என்றார். மேலும், “இந்திய அரசின் ஜன்தன் திட்டம் மற்றும் இதர பல திட்டங்கள், இந்த வழியில், நிதி துறையில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை புகுத்துகின்றன. இதனால், நாட்டின் நிதி துறை வலுவடைந்துள்ளது” என்று கூறினார். இந்த நிகழ்வில், சுகாதாரத் துறையிலும் இந்தியா பல மடங்கு முன்னேறி வருவதாக கூறப்பட்டது. சுகாதாரத் துறையில் நிதி துறையின் பங்கீடு குறித்தும் பேசப்பட்டது. பல்வேறு துறைசார் வல்லுனர்கள், இது தொடர்பாக தங்கள் கருத்துக்களை பகிர்ந்தனர்.