இந்தியாவின் முதல் ஹைபிரிட் சவுண்டிங் ராக்கெட், செங்கல்பட்டு அருகில் உள்ள பட்டிப்புலம் கிராமத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது. தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் முன்னிலையில் நடந்த இந்த நிகழ்வில், இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பங்கேற்றார். இது, ‘2023 டாக்டர் அப்துல் கலாம் செயற்கைக்கோள்கள் திட்டம்’ படி செயல்படுத்தப்பட்டதாகும். இதில், இந்தியாவில் உள்ள பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த 5000 க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் உருவாக்கிய 150 PICO செயற்கைக்கோள்கள் அனுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மார்ட்டின் அறக்கட்டளை, டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் சர்வதேச அறக்கட்டளை மற்றும் ஸ்பேஸ் ஜோன் நிறுவனம் ஆகியவை இணைந்து இதனை செயல்படுத்தியுள்ளன. இந்தியாவின் முதல் ஹைபிரிட் ராக்கெட் ஆன இதில், 150 செயற்கைக்கோள்கள் செலுத்தப்பட்டு வரலாறு படைக்கப்பட்டுள்ளது. சுமார் 2.5 கோடி ரூபாய் மதிப்பில், ஒரு கிலோவுக்கும் குறைவான எடை கொண்ட இந்த செயற்கைக்கோள்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இவை, காற்றின் தரம், ஓசோன் மண்டலத்தின் தன்மை உள்ளிட்ட பல்வேறு தகவல்களை சேகரிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.