இந்தியாவின் புத்தாக்க விண்வெளி நிறுவனம் ஸ்கை ரூட் ஆகும். இந்த நிறுவனம் விக்ரம் 1 ராக்கெட்டை வடிவமைத்துள்ளது. இந்த ராக்கெட்டின் இரண்டாம் நிலை மோட்டார் பரிசோதனை வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும், இந்த ராக்கெட் மூலம் செயற்கைக்கோளை விண்ணில் நிறுவும் பணி இவ்வருட இறுதியில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விக்ரம் 1 ராக்கெட்டின் இரண்டாம் நிலை பாகம் ‘கலாம் 250’ என பெயரிடப்பட்டுள்ளது. இது கார்பன் பொருட்களால் அதிக திடத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது. ராக்கெட்டை பூமியின் வளிமண்டலத்தில் இருந்து விண்வெளிக்கு கொண்டு செல்லும் முக்கிய பாகமாக இது இருக்கும் என கூறப்பட்டுள்ளது. இந்த பாகத்துக்கான பரிசோதனை சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் நடத்தப்பட்டது. சுமார் 85 வினாடிகளுக்கு, உச்சபட்ச சூழலில் இந்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த சோதனை வெற்றியடைந்துள்ளது மிக முக்கிய மைல்கல் என ஸ்கை ரூட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பவன் சந்தனா தெரிவித்துள்ளார்.