யுபிஐ பரிவர்த்தனை இந்தியாவில் 2016-ம் ஆண்டு நடைமுறைக்கு வந்தது. அதன்பிறகு இந்தியாவின் பணப்பரிவர்த்தனை நடைமுறை மிகப் பெரும் அளவில் மாற்றம் அடைந்தது. யுபிஐ வருகைக்குப் பிறகு இந்தியாவின் பணப்பரிமாற்றச் செயல்பாடு எளிமையாக மாறியது. தற்போது இந்தியாவில் பெட்டிக்கடை முதல் பெரிய அளவிலான வணிகப் பரிவர்த்தனை வரையில் யுபிஐ இன்றியமையாததாக மாறியுள்ளது. யுபிஐ கட்டமைப்பில் இந்தியா உலக நாடுகளுக்கு முன்னோடியாக திகழ்கிறது.
இந்நிலையில், மற்ற நாடுகளுடன் யுபிஐ தொழில்நுட்பத்தை பகிர்ந்துகொள்ள இந்தியா முன்வந்துள்ளது. அக்டோபர் 12-ம் தேதி நடைபெற்ற காமன்வெல்த் நாடுகளின் வங்கி கவர்னர்கள்
கூட்டத்தில் பங்கேற்ற இந்தியா, யுபிஐ தொழில்நுட்பத்தை ஏனைய நாடுகளுடன் பகிர விரும்புவதாக தெரிவித்தது. இந்தியாவின் இந்த முடிவை காமன்வெல்த் பொதுச் செயலர் பாட்ரிசியா ஸ்காட்லாந்து வரவேற்றுள்ளார்.
இது குறித்து பாட்ரிசியா ஸ்காட்லாந்து கூறுகையில், “இந்தியா தன் தொழில்நுட்பத்தை மற்ற நாடுகளுடன் பகிர விருப்பம் தெரிவித்திருப்பது பெருந்தன்மையானது. இந்தியா போல வேறு சில நாடுகளும் இத்தகைய தொழில்நுட்பங்களை உருவாக்கியுள்ளன. ஆனால், இந்தியாதான் அதை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தியுள்ளது. தவிர, அதை பகிரவும் முன்வந்துள்ளது.
யுபிஐ தொழில்நுட்பத்தை இந்தியா மற்ற நாடுகளுடன் பகிர்வது டிஜிட்டல் கட்டமைப்பில் மிகப் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும். மக்களின் வங்கிக் கணக்குகளுக்கே நேரடியாக உதவித் தொகையை அனுப்புவதால், பணம் மக்களின் கைகளுக்கு உடனடியாக சென்று விடுகிறது” என்று அவர் குறிப்பிட்டார்.