நேற்று இரவு தில்லியில் இருந்து பெங்களூருவுக்கு இண்டிகோ நிறுவனத்தின் 6இ2131 விமானம் ஒன்று புறப்பட இருந்தது. விமானம் இயக்கப்பட்டு, ஓடுபாதையில் செல்லத் தொடங்கிய போது, அதில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. எனினும், உடனடியாக விமானம் நிறுத்தப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. முதலில், விமானத்தின் என்ஜினில் இருந்து தீப்பொறிகள் கிளம்பின. சிறிது நேரத்தில் என்ஜினில் தீ கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்தது. விமானி, துரிதமாக செயல்பட்டு, விமானத்தை உடனடியாக நிறுத்தினார். இதனால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
விமானத்தில் 177 பயணிகள், 7 பணியாளர்கள் என மொத்தம் 184 பேர் இருந்தனர். அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். விமான நிலையத்தில் அவசர நிலை அறிவிக்கப்பட்டு, செயல்பாடுகள் நடத்தப்பட்டதால், அங்கு பரபரப்பு நீடித்தது. பின்னர், பயணிகளுக்கு மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டு, அனைவரும் பெங்களூருவுக்கு அனுப்பி வைக்கப் பட்டனர். விமானத்தில் ஏற்பட்ட தீ விபத்து குறித்த காணொளி சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவி வருகிறது. இந்நிலையில், விபத்து குறித்து விசாரணை நடத்த விமானப் போக்குவரத்து இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. அதன் பெயரில், விமானம் ஆய்வுக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.














