இண்டிகோ நிறுவனத்தின் புதிய தலைமைச் செயல் அதிகாரியாக கேஎல்எம் நிறுவனத்தின் முன்னாள் தலைமை அதிகாரி பீட்டர் எல்பர்ஸ் பதவியேற்றுக்கொண்டார்.
இண்டிகோ நிறுவனம் பங்குச் சந்தைக்கு தனது அறிக்கையை அண்மையில் சமர்ப்பித்திருந்தது. அதில், செபி ஒழுங்குமுறையின் படி, செப்டம்பர் 6ம் தேதி முதல் இண்டிகோ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பெட்ரஸ் ஜோகானஸ் தியோடோராஸ் எல்பர்ஸ் (பீட்டர் எல்பர்ஸ்) பொறுப்பேற்பார் என்று கூறியுள்ளது. இதற்கு முன்னால் 71 வயதான ரோனோஜோய் தத்தா தலைமை அதிகாரியாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், நெதர்லாந்தைச் சேர்ந்த பீட்டர் எல்பர்ஸ், 3 வாரங்களுக்கு முன்னரே பொறுப்புகளை ஏற்றுக் கொண்டார் என்று கூறப்படுகிறது.
கடந்த மே மாதம் 18ம் தேதி, இண்டிகோ நிறுவனம் வெளியிட்டிருந்த அறிக்கையில், செப்டம்பர் 30ம் தேதியுடன் தத்தாவின் பதவிக்காலம் நிறைவடைவதாக குறிப்பிடப்பட்டிருந்தது. அதன்படி, தற்போது எல்பர்ஸ் புதிய அதிகாரியாக பதவியேற்றுள்ளார். இன்றைய தேதியில், 52 வயதாகும் பீட்டர் எல்பர்ஸ், 1992 ஆம் ஆண்டு முதல் கேஎல்எம் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அந்த நிறுவனத்தில், பல்வேறு பதவிகளை வகித்த அவர், 2014 ஆம் ஆண்டு முதல், கேஎல்எம் ராயல் டச் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரி பதவிகளை அலங்கரித்தார். வணிகப் பொருளாதாரம் பயின்றுள்ள அவரது தலைமையில் அந்த நிறுவனம் நல்ல வளர்ச்சி கண்டது.
இண்டிகோ நிறுவனத்தின் நிர்வாக அதிகாரி ராகுல் பாட்டியா இது குறித்து பேசுகையில், “எங்கள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பீட்டர் எல்பர்ஸ் நியமிக்கப்பட்ட செய்தியை அறிவிப்பதில் மகிழ்ச்சி கொள்கிறோம். அவரது தலைமையின் கீழ் இந்தியாவில் எங்கள் நிறுவனம் நல்ல வளர்ச்சி அடையும் என்று ஆணித்தரமாக நம்புகிறோம்” என்று கூறியுள்ளார்.