இந்தோனேசியாவின் மராபி எரிமலை நேற்று வெடித்தது.
மேற்கு சுமத்ரா மாகாணத்தின் அகம் மாவட்டத்தில் 9,480 அடி உயரமான மராபி, திடீர் வெடிப்புகளுக்கு ஆளாகி வருகிறது. கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு பருவமழையின் விளைவாக அந்த பகுதியில் கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டது. அதில் 67 பேர் உயிரிழந்தனர். தற்போது, மராபி வெடிப்பின் போது, புகை மேகங்கள் பல கி.மீ. தொலைவுக்கு பரவியுள்ளன. மேலும் அருகிலுள்ள கிராமங்கள் மற்றும் நகரங்களை எரிமலைக் குழம்புகள் சூழ்ந்துள்ளன. கடந்த ஆண்டின் டிசம்பர் மாதத்தில், மராபி எரிமலை வெடித்தபோது 24 பேர் உயிரிழந்தனர். அதன்பின் எரிமலைச் சிகரத்துக்குச் செல்லும் பாதைகள் மூடப்பட்டன. இதுவரை உயிரிழப்புகள் குறித்து தகவல் இல்லை. 28.2 கோடி மக்கள் வசிக்கும் இந்தோனேசியா, நில அதிர்வுக்கான கோடுகளில் உள்ளதால், அடிக்கடி நிலநடுக்கம் மற்றும் எரிமலை வெடிப்புகளை சந்திக்கிறது.