இண்டஸ் இண்டு வங்கியின் தலைமை செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குனர் பதவிக்கு சுமந்த் கத்பாலியா மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். அதைத் தொடர்ந்து, இன்று, அந்த வங்கியின் பங்குகள் மூன்று சதவீதம் உயர்ந்துள்ளன. மும்பை பங்குச் சந்தையில், இன்று காலை 10:30 மணி நிலவரப்படி, இண்டஸ் இண்டு வங்கியின் பங்குகள் 2.71% உயர்ந்து, 1228.45 ரூபாய்க்கு வர்த்தகம் ஆனது. இதனால், இந்திய பங்குச் சந்தைகள் ஒரு சதவீத இழப்பில் வர்த்தகமாகி வந்த நிலையிலும், இண்டஸ் இண்டு வங்கியின் பங்குகள் அதிகளவில் வாங்கப்பட்டன.
செப்டம்பர் 15ஆம் தேதி, இண்டஸ் இண்டு வங்கியின் நிர்வாகக்குழு கூட்டம் நடைபெற்றது. அதில், அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு, சுமந்த் கத்பாலியாவை தலைமை அதிகாரியாக மீண்டும் நியமிக்க முடிவெடுக்கப்பட்டது. மத்திய ரிசர்வ் வங்கி மற்றும் இண்டஸ் இண்டு வங்கியின் பங்குதாரர்கள் போன்றோரின் ஒப்புதலுடன் இந்த மறு நியமனம் முடிவெடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. சுமந்த் கத்பாலியா இண்டஸ் இண்டு வங்கியின் வளர்ச்சிக்கு பெருமளவு வித்திட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.