இஞ்சி

ஜிஞ்சிபெர் அபிசினால் எனும் தாவரத்தில் இருந்து தோன்றும் மூலிகை வேர் இஞ்சி. இது பண்டைய இந்தியாவைத் தாயகமாகக் கொண்ட தாவரமாகும். இந்தியாவின் இஞ்சி பயன்பாடு குறித்த சான்றுகள் சிந்து சமவெளி நாகரிகம் முதலே கிடைக்கின்றன. சிந்துவெளி மக்கள் இஞ்சியை விளைவித்தது அகழ்வாராய்ச்சிகள் மூலம் நிரூபணமாகியுள்ளது. மேலும், அங்கு கிடைத்தப் பானைகளை ஆராய்ந்ததில் இஞ்சி, மஞ்சள் மற்றும் பூண்டு ஆகியவை சமையல் செய்யப் பயன்படுத்தப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. சிந்துவெளியின் தொடர்ச்சியான தமிழ் நாகரிகத்திலும் இஞ்சியின் பயன்பாடு குறித்த ஆதாரங்கள் […]

ஜிஞ்சிபெர் அபிசினால் எனும் தாவரத்தில் இருந்து தோன்றும் மூலிகை வேர் இஞ்சி. இது பண்டைய இந்தியாவைத் தாயகமாகக் கொண்ட தாவரமாகும். இந்தியாவின் இஞ்சி பயன்பாடு குறித்த சான்றுகள் சிந்து சமவெளி நாகரிகம் முதலே கிடைக்கின்றன. சிந்துவெளி மக்கள் இஞ்சியை விளைவித்தது அகழ்வாராய்ச்சிகள் மூலம் நிரூபணமாகியுள்ளது. மேலும், அங்கு கிடைத்தப் பானைகளை ஆராய்ந்ததில் இஞ்சி, மஞ்சள் மற்றும் பூண்டு ஆகியவை சமையல் செய்யப் பயன்படுத்தப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சிந்துவெளியின் தொடர்ச்சியான தமிழ் நாகரிகத்திலும் இஞ்சியின் பயன்பாடு குறித்த ஆதாரங்கள் இலக்கியங்கள் வாயிலாகக் கிடைக்கின்றன. இஞ்சி, மிளகு, மஞ்சள், முதலியன கல்தரையில் விற்பனைக்காகக் குவிக்கப்பட்டுள்ளன என்பதை “இஞ்சி மஞ்சள் பைங்கறி பிறவும் பல்வேறு தார மொடு கல்லகத்து ஈண்டி” என்ற மதுரைக் காஞ்சி வரிகள் விளக்குகின்றன. இதன் மூலம், இஞ்சி என்பது தமிழர்கள் வாழ்வில் சமையல் மற்றும் மருந்துப் பொருளாகப் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே வேரூன்றி விட்டது என்பது உறுதியாகிறது. மேலும், இஞ்சி தமிழகத்தில் விற்கபட்டதும் அறியப்படுகிறது. அதோடு, சிலப்பதிகாரத்தில் வரும் "மஞ்சளு மிஞ்சியு மயங்கரில் வலயத்து” என்ற வரிகள் நிலத்துக்கடியில் இஞ்சியும் மஞ்சளும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்து, நிறைந்து வளம் கொளிக்கும் வரப்பு என்று பொருள் படும் படியாகச் சோழ நாட்டின் வளத்தை எடுத்துரைக்கிறது. இது தமிழகத்தில் இஞ்சி மஞ்சலோடு சேர்த்து விளைவிக்கப்பட்டதை உறுதிப்படுத்துகின்றது.

மேலும், இஞ்சியானது தமிழகத்தில் இருந்துதான் உலகின் பல பகுதிகளுக்கும் பரவியது என்பது இஞ்சியின் பெயரில் இருந்து தெரிய வருகிறது. தமிழ் மொழியில் இஞ்சுதல் என்றால் நீரை உள்ளிழுத்தல் என்று பொருள்படும். வேரானது நிலத்திலிருக்கும் நீரை உறிஞ்சி உள்ளிழுத்து தன்னுடய செடிக்குக் கொடுக்கிறது. அப்படிச் செய்வதால் அதற்கு இஞ்சி என்ற பெயர் வந்தது. அதுவே இந்தத் தாவரத்தின் பெயராகவும் அமைந்தது. இந்த "இஞ்சிவேர்" என்ற தமிழ்ச்சொல் லத்தீனில் ஜிஞ்சிபர் என்றாகி, கிரேக்கத்தில் ஜிஞ்சிபெரா ஆகி ஆங்கிலத்தில் ஜிஞ்செர் என்று ஆகியிருக்கிறது. வெயிலில் சுள்ளென்று காய்ந்த மரக்குச்சி 'சுள்ளி' என்றானது போல உலர்ந்த இஞ்சி 'சுக்கு' என அழைக்கப்படுகிறது. இது பல மருத்துவப் பயன்களைக் கொண்டிருக்கிறது. இதன் மேன்மையை "சுக்குக்கு மிஞ்சிய வைத்தியமும் இல்லை, சுப்பிரமணியருக்கு மிஞ்சிய தெய்வமும் இல்லை" என்ற பழமொழியின் மூலம் அறியலாம். எனவே, இஞ்சி மற்றும் சுக்கு என இரண்டுமே பன்னெடுங்காலமாய், இந்தியா மற்றும் சீனாவில் மருந்தாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. கி.மு 4ஆம் நூற்றாண்டு சீன நாட்டு குறிப்புகளின் படி, இஞ்சி வயிறு சம்பந்தமான உபாதைகளுக்கும், சுவாசப் பிரச்சனைகளுக்கும், வயிற்றுப்போக்கு, காலரா, பல் வலி, ரத்தக்கசிவு போன்ற பிரச்சனைகளுக்கும் தீர்வாக இருந்து வந்துள்ளது தெரிகிறது. 5ஆம் நூற்றாண்டில் 'ஸ்கர்வி' எனப்படும் விட்டமின் சி குறைபாட்டினால் உண்டாகும் நோய்க்கு சீனர்கள் இஞ்சியை மருந்தாகப் பயன்படுத்தி வந்துள்ளனர். இன்றும் கூட சீன மூலிகையாளர்கள் இஞ்சியை இருமல் மற்றும் சளி தொந்தரவுகளுக்கு மருந்தாகப் பயன்படுத்துகிறார்கள்.

இந்தியாவில், ஆயுர்வேத குறிப்புகளில் இஞ்சி மிக முக்கிய மூலிகைப் பொருளாக முன்னிறுத்தப்படுகிறது. ஆயுர்வேத மருத்துவப் பயிற்சியாளர்கள் இஞ்சியை ஜீரணசக்தியைப் பெருக்குவதற்காகவும் பசியைத் தூண்டுவதற்காகவும் உடலின் நுண்ணியப் பாதைகளைச் சுத்திகரிப்பதற்காகவும் இஞ்சியைப் பரிந்துரைக்கின்றனர். உடல் தசைகளுக்கு வலுவூட்டக் கூடிய ஊட்டச்சத்துகளை மேம்படுத்தும் திறன் கொண்டதால், இஞ்சி மற்றும் சுக்கு ஆகியன சித்த மருத்துவத்தில் உடல் வலி மற்றும் அசதிக்கும், சுவாசப் பிரச்சனைகளுக்கும் மலச்சிக்கல் பிரச்சனைகளுக்கும் தீர்வாகப் பயன்படுத்தப் படுகிறது.

காலையில் இஞ்சி,
கடும்பகல் சுக்கு,
மாலையில் கடுக்காய்
மண்டலம் சாப்பிட
கோலூன்றி நடந்தவன் கோலைவீசி
நடப்பான் மிடுக்காய்

எனும் பழம்பாடல் இஞ்சி மற்றும் சுக்கின் மகிமையை எளிமையாக உணர்த்துகின்றது. நவீன மருத்துவ ஆராய்ச்சிகளும் இஞ்சி கடினமானப் பண்டங்களை எளிதில் செரிப்பிக்கும் எனவும் பித்தவாயுவைக் கண்டிக்கும் என்பதையும் வாயில் சுரக்கும் உமிழ்நீரைப் பெருக்கிப் பசியைத் தூண்டும் எனவும் உறுதி படுத்துகின்றன.

சில வருடங்களுக்கு முன்பு வரை, தமிழர்கள் தங்கள் வாழ்வில் வாரம் ஒருமுறையாவது இஞ்சிச்சாறு அருந்துவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். ஒவ்வொரு வீட்டிலும், சிறிய குழந்தைகளுக்கு, தேனோடு கலந்து இஞ்சியை சுரசம் செய்து கொடுப்பது கட்டாயமாகக் கடைபிடிக்கப்பட்டது. கால மாற்றத்தால் இந்த வழக்கம் இப்போது மறைந்து விட்டது. இதனால், உடல் வலுவும் குறையத் துவங்கியுள்ளது. இந்த வழக்கம் மீண்டும் வர வழி வகுத்து உடல் ஆரோக்கியம் பெறுவோம்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu