உணவு பாதுகாப்பு துறைக்கு இணையதளம், நுகர்வோர் குறைதீர்வு கைபேசி செயலியை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிமுகம் செய்து வைத்தார்.
சென்னை அண்ணா சாலையில் உள்ள அரசு பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை கூட்டரங்கில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், உணவு பாதுகாப்பு துறையின் இணையதளம் மற்றும் நுகர்வோர் குறைதீர்வு கைபேசி செயலியை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிமுகம் செய்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், உணவு பாதுகாப்பு தொடர்பாக www.foodsafety.tn.gov.in என்ற இணையதளமும், கைபேசி செயலியும் (TN CONSUMER APP) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இருமொழி (தமிழ், ஆங்கிலம்) மற்றும் மாற்றுத் திறனாளிகளும் எளிதாக பயன்படுத்தும் வகையில் ஸ்கிரீன்ரீடர் அணுகல் வசதியுடன் இந்த இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
மக்கள் எளிதாக கையாளும் வகையிலும், நுகர்வோரின் குறைகளை நிவர்த்தி செய்யும் விதமாகவும், உணவு பாதுகாப்பு துறை மூலம் பிரத்யேகமாக ‘தமிழ்நாடு உணவு பாதுகாப்பு நுகர்வோர் செயலி’ (TN Food safety Consumer App) உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயலியை ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ் (IOS) ஸ்மார்ட்போன்களில் பதிவிறக்கம் செய்யலாம்.